Skip to main content

தற்காலிக ஊழியர்கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகள்!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

Buses operated by temporary staff


"அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஒட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட ஊழியர்களுக்குத் தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை எடுத்து அரசின் மற்ற நிர்வாகத்திற்குச் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும்" என அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்காகப் பல கட்டப் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

 

இதற்கிடையே அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்குவது, மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது. ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது. புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதிசெய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 25ஆம் தேதி முதல் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட 9 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்பே அறிவித்தது. இதையும் தமிழக அரசு பொருட்படுத்தாததால், தொழிற்சங்கங்கள் அறிவித்தபடி 25ஆம் தேதி காலை போராட்டத்தில் குதித்தனர். 

 

மக்கள் மத்தியில் பஸ்கள் முழுமையாக இயக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இன்றைய தினம் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என அரசு அறிவித்தது. பணிக்கு வராத ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துக் கழகங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை ஈரோடு காசிபாளையம், அந்தியூர், நம்பியூர், பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி, பவானி உட்பட 13 பணிமனைகளில் தினமும் 720 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 60 சதவீதம் வெளி மாவட்டங்களுக்கும், 40 சதவீதம் உள்  மாவட்டத்திற்குள்ளும் இயக்கப்பட்டு வருகின்றன. 

 

இந்த நிலையில், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில், அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பஸ்களை இயக்க அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி 25ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் 30 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் பெரும்பாலும் இயங்கியது. பெருமளவு பயணிகள் பேருந்து இல்லாமல் அவதிப்பட்டனர். ஓடிய பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, "தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த உடனேயே அதற்கான மாற்று ஏற்பாடுகளை நாங்கள் செய்யத் தொடங்கி விட்டோம். ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 13 பணிமனைகளில் 720 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை" என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.