திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் நகரில் இருந்து செப்டம்பர் 26 ந்தேதி மாலை ஆரணி நோக்கி சென்ற தனியார் பேருந்தும், ஆரணியில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற அரசு பேருந்தும் வேலூர் மாவட்டம், மாம்பாக்கம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அரசுப்பேருந்து பலத்த சேதமடைந்தது. இரண்டு பேருந்துகளில் பயணித்த 20 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள், அந்த வழியாக வந்த வேறு வாகனங்களில் ஏற்றப்பட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அடிபட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இருவருக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் மேற்சிகிச்சைக்காக சென்னை அனுப்ப முடிவு செய்துள்ளனர். இந்த விபத்துக்குறித்து கலவை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.