Skip to main content

கடலூரில் பேருந்து சேவை நிறுத்தம்; மாணவர்கள், பொதுமக்கள் அவதி

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

 Bus service stop at Cuddalore; Students and public suffer

 

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

தொடர்ந்து இன்று பாமகவினர் என்.எல்.சி முன்பு நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. காவலர்கள் தாக்கப்பட்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாகவும், முன்னதாகவே பேருந்து மீது கல்வீச்சுகள் நிகழ்ந்ததன் காரணமாகவும் கடலூரில் இன்று மாலை 6 மணி முதல் பேருந்துகள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்டத்தின் பதற்றமான பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

அறிவிப்பின்படி பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாகக் கல்லூரி, பள்ளி சென்றுவிட்டுத் திரும்பும் மாணவ மாணவிகள், விளையாட்டு பயிற்சிக்காக வந்த மாணவர்கள் எனப் பலர் வீட்டிற்குச் செல்ல முடியாமல் பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்