The bus rushed to the police station after the woman shouted

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ளது அருங்குணம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயது ராமாயி. இவர் தனது பெண் தோழி லட்சுமியுடன் தனது ஊரிலிருந்து புறப்பட்டு பண்ருட்டி நகரத்திற்கு வந்து அங்குள்ள ஒரு நகைக் கடையில் ஒரு பவுன் தங்க நகை வாங்கியுள்ளார். அதன் பின்னர் ஏற்கனவே ராமாயி வங்கியில் அடகு வைத்திருந்த நகையையும் மீட்டுக்கொண்டு தங்கள் ஊருக்குச் செல்ல பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அங்குள்ள ஒரு தனியார் பேருந்தில் ஏறி அவர்களது ஊருக்குப் பயணம் செய்தனர். அப்படி பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ராமாயி பேக்கில் வைத்திருந்த பணம், நகை ஆகியவை காணவில்லை.

Advertisment

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராமாயி கத்திக் கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக பண்ருட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். காவல் நிலைய உதவி ஆய்வாளர் தீபன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பேருந்தில் இருந்த பயணிகள் யாரும் இறங்கவிடாமல் அப்படியே காவல் நிலையம் கொண்டு வந்தனர். பஸ்சில் பயணம் செய்த அனைவரையும் பெண் காவலர்களைக் கொண்டு சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்தனர். அதில் இரு பெண்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனர். அவர்கள் இருவரையும் பெண் போலீசார் சோதனை செய்தனர்.

Advertisment

அவர்களிடமிருந்து ராமாயிக்கு சொந்தமான ஆயிரம் ரூபாய் பணமும்3 பவுன் நகையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண்கள் இருவரும் தாங்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ராமாயி தனது பணம், நகை களவு போனது குறித்து புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, ஓடும் பஸ்ஸில் நகை, பணம் திருடிய அந்த இரு பெண்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அந்தப் பெண்கள் இருவரும்வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மரகதம் (30), நந்தினி (28) என்பது விசாரணையில் தெரியவந்தது.