
காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து பொன்னேரிக்கரை பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பாலத்தின் தடுப்புச் சுவர் மீது விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாநகர் வழியாக சென்ற அரசு பேருந்து பூந்தமல்லி நோக்கி பொன்னோரிகரை பாலத்தில் மீது சென்று கொண்டிருந்தது. பேருந்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதில் பேருந்து சென்று கொண்டிருந்த பாதையில் இருந்து எதிர் திசையில் பாய்ந்தது. இதில் எதிர்புறம் வந்த கார் மீது மோதிய பேருந்து பாலத்தின் சுவர் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பேருந்தின் முன்சக்கர அச்சு முறிந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கதறிய நிலையில் பாலத்தின் மேலேயே பேருந்து நின்றதால் பெருமூச்சுவிட்டனர்.
இருப்பினும் இந்த விபத்தில் 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பேருந்து கார் மீது மோதாமல் இருந்திருந்தால் பாலத்தில் இருந்து பேருந்து கீழே விழுந்திருக்க நேரிட்டிருக்கும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவத்தினால் பொன்னேரிக்கரை பாலத்தின் மீது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.