Skip to main content

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; 70 பேருக்கு காயம்! மீட்புப் பணியில் போக்குவரத்துத் துறை அமைச்சர்! 

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Bus accident in virudhachalam 70 people injured

 

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த சேப்பாக்கம் கிராமத்திலிருந்து இன்று காலை சுமார் 7.30 மணியளவில்  ‘22’ என்ற தடம் எண் கொண்ட அரசுப் பேருந்து புறப்பட்டு நல்லூர்,  மேமாத்தூர் கிராமங்கள் வழியாக விருத்தாச்சலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அவ்வாறு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து, கோமங்கலம் கிராமத்தின் அருகே  வருகின்றபோது எதிரே ஒரு டாட்டா ஏஸ் வாகனம் வந்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம் அரசுப் பேருந்து நடத்துநர் சரவணன் திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, தாறுமாறாக ஓடி பயணிகளுடன் அருகே செல்லும் பாசன வாய்க்காலில் தலைக்குப்புற  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கதறி கூச்சலிடும் சத்தம் கேட்டு கோமங்கலம் கிராமத்தினர் உடனடியாக  சென்று பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாகவும், தீயணைப்பு வண்டி மூலமாகவும் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

 

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 70 பயணிகளுக்கு தலை, கை, கால்கள்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த அடியுடன் காயங்களும் ஏற்பட்டது. பேருந்தை ஓட்டி வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் சரவணனுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

 

கிராமப்புறங்களில் இருந்து நகரத்துக்குச் செல்லும் அரசுப் பேருந்து என்பதால் தினசரி வேலைக்குச் செல்லும் பெண்களும், மாணவ மாணவிகளும் என சுமார் 80க்கும் மேற்பட்டோர் இந்தப் பேருந்தில் பயணித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் மற்றும் அவரது உறவினர்கள் என 200க்கும் மேற்பட்டோர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. 

 

Bus accident in virudhachalam 70 people injured

 

அதேசமயம் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் போதிய இட வசதி இல்லாததால், விபத்தில் சிக்கியவர்கள் வராண்டாவில் அமரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதிகளவில் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் கூட்டம் நிரம்பியதால் காவல்துறையினரும், மருத்துவர்களும் திணறினர்.

 

இதனிடையே அவ்வழியே சென்ற தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருந்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வசதி செய்து தரக்கோரியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக சம்பவ இடத்திலிருந்து மீட்பு பணியில் அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.