Skip to main content

சேலத்தில் அரசுப்பேருந்து - கல்லூரி பேருந்து மோதல்; 30 பேர் பலத்த காயம்!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

சேலம் அருகே, இன்று காலை அரசுப் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் மோதிய விபத்தில் மாணவர்கள் உள்பட 30 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
 

bus accident in  salem

 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து வியாழக்கிழமை (அக். 10) காலை, அரசு நகரப் பேருந்து ஒன்று சேலம் பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அயோத்தியாப்பட்டணம் அருகே ராமலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் பகுதிக்கு காலை 9.15 மணிக்கு வந்தது. அப்போது, சேலம் - ஆத்தூர் புறவழிச்சாலையில் இருந்து உள்சாலைக்கு பேருந்து திரும்பியது.

அந்த நேரத்தில் அதே சாலையில் ராமலிங்கபுரத்தில் உள்ள ஏவிஎஸ் பொறியியல் கல்லூரி பேருந்தும் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரசுப்பேருந்தின் முகப்பு அருகே பக்கவாட்டு பகுதியில் கல்லூரி பேருந்து பலமாக மோதியது.


 

bus accident in  salem

 

இந்த விபத்தில், தனியார் கல்லூரி பேருந்தின் முன்பக்கம் நசுங்கியது. அரசுப்பேருந்தும் பெருத்த சேதம் அடைந்தது. கல்லூரி பேருந்தில் இருந்த மாணவர்களும், அரசுப்பேருந்தில் இருந்த பயணிகளும் பலத்த காயம் அடைந்தனர். விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அலறினர். மாணவர்கள் உள்பட முப்பதுக்கும் மேற்பட்டோர் பலத்த  காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. காரிப்பட்டி காவல் ஆய்வாளர் கேசவன் தலைமையில் காவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

 

mm

 

மீட்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, விபத்தில் சிக்கிய இரண்டு பேருந்துகளும் அப்புறப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. விபத்து காரணமாக சேலம் - சென்னை புறவழிச்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து காரிப்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.