திருச்சியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெடுங்கூர் என்ற இடத்தில் இன்று காலை கார் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்தது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த ஊர் காவல் காவல் படை வீரர் ராகேஷ் என்பவர் திருப்தி சென்று விட்டு குடும்பத்துடன் காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கார் சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெடுங்கூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. சுதாரித்துக் கொண்ட குடும்பத்தினர் 2 குழந்தைகள் உள்பட காரில் பயணித்த 6 பேரும் உடனடியாக காரை விட்டு இறங்கியுள்ளனர்.
இது குறித்து சமயபுரம் தீயணைப்புத் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பற்றி எரிந்த காரை அணைத்தனர். மேலும் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காரில் உள்ள ஏசி பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் தீப்பிடித்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் காரை உடனடியாக நிறுத்தி அனைவரும் வெளியேறியதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. நடுரோட்டில் பற்றி எரிந்த காரால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.