Burglary in neighbouring houses near Bhavani

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த காலிங்கராயன் பாளையம், காமதேனு நகர் முதல் வீதியில் 9 வீடுகள் கொண்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் புகுந்துள்ளது. இந்த கும்பல் ஆள் இருக்கும் வீடுகளின் முன்பக்க கதவை பூட்டு போட்டு விட்டு ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டுள்ளனர். ஆள் இல்லாத வீட்டை கண்டறிந்து பொருட்கள், பணத்தை திருடி சென்றுள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த ரெயில்வே துறையில் டெக்னீசியனாக பணியாற்றி வரும் வீரராகவன் என்பவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். அவரது மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். பின்னர் அதே பகுதியில் அங்கன்வாடி மையத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் உணவுப்பொருள், காய்கறிகளை சேதப்படுத்தி சென்றுள்ளனர். திருட்டுப் போன பொருட்களின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை.

இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.