சென்னை பாரிமுனையில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது.
சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரர் தெரு பகுதியில் பழமை வாய்ந்த கட்டடம் உள்ளது. இந்த 4 மாடிக் கட்டடத்தை சமீபத்தில் வாங்கிய ஒருவர், அதனைப் புதுப்பிக்கும் வகையில் அதற்கானபணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த கட்டடம் சுமார் 100 வருடப் பழமையான கட்டடம் என்று கூறப்படுகிறது. கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை கட்டடத்தின் அடிப்பகுதி திடீரென சரிந்ததில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். கட்டட இடிபாடுகளில் 4 பேர் வரை சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் ஒருவர் மீட்கப்பட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.