“காது குடையுறது எல்லாம் சாப்பாட்டுல போட்டா எப்பிடிங்க சாப்புடுறது”- காரக்குழம்பில் இருந்த பட்ஸ்.. அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!

 Buds in the food.. Shocked customer..

சென்னை அடுத்த பல்லாவரத்தில் உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் காது குடையும் காட்டன் பட்ஸ் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் உணவகத்தின் ஊழியர்களுடன் பேசும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பல்லாவரத்தில் கடந்த 60 வருடங்களாக செயல்பட்டு வரும் உணவகத்திற்கு அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மதிய உணவு சாப்பிடச் சென்றுள்ளார். சாப்பிடும் பொழுது காரக்குழம்பில் காதுகளை குடையும் பட்ஸ் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதை தனது செல்போனில் வீடியோ காட்சியாக எடுத்துக்கொண்டு அதை அங்கிருந்த பணியாளர்களிடம் காட்டி கேட்ட பொழுது அவர்கள் சரியாக பதில் சொல்லாததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.

அந்த வீடியோ பதிவில், “பாருங்க இது. காது குடையுறது எல்லாம் சாப்பாட்டுல போட்டா எப்பிடிங்க சாப்புடுறது. யோசிச்சி பாருங்க. காதுக்கு யூஸ் பண்றதெல்லாம் சாப்பாட்டுக்கு எப்படி வரும்? சாப்பாட்டுக்கு காசு வாங்குறீங்கள்ள” என வாடிக்கையாளர் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுடன் கேட்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நாள் கடந்த மாமிசப் பொருட்கள், சுகாதாரமற்ற முறையில் உணவுகளில் தயார் செய்யப்படும் முறை, உணவுகளில் புழு, பூச்சிகள் போன்றவை இருப்பது எனத் தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகள் வருவதால் உணவுத்துறை அதிகாரிகள் தங்களது சோதனைகளைக் கடுமையாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe