திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற திருபாம்பரம் கோயிலுக்கு தரிசனம் செய்யவந்திருந்தார் மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை. அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
"மத்தியஅரசால் தாக்கல் செய்யப்பட்ட ஐந்தாண்டுகள் பட்ஜெட்டால் தனது கரூர் நாடாளுமன்ற தொகுதியில் எந்த மாற்றமும் நடக்கவில்லை, தொழில்கள் நலிவடைந்துள்ளது. தனிநபர் வருமான உச்சவரம்பு ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பட்ஜெட்டில் சிலவற்றை வரவேற்றாலும் பல விஷயங்களை வரவேற்கமுடியாது. பட்ஜெட்டில் தமிழகம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்றே கூற வேண்டும். இந்தபட்ஜெட் பாரதிய ஜனதாவின் தேர்தல் வாக்குறுதி என்றே சொல்லலாம்.
மத்திய இணை அமைச்சர்பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு பேட்டியின் போது ஓருகட்சியை நாக பாம்பு என குறிப்பிட்டு அந்த விஷம் மருந்தாக பயன்படும் என தெரிவித்தார். எங்கள் கட்சியை ஊழல் கட்சி என கூறுகிறார். எந்தகட்சியுடன் கூட்டணி சேரவிருப்பது என்பது குறித்து அவர் தெரிவிக்க வேண்டும்.
அதிமுக தமிழகத்திற்கு உதவி செய்பவர்களுடன் கூட்டணி வைப்போம் என முதல்வர் தெரிவித்துள்ளார். அப்படி உதவி செய்பவர்களுடன் கூட்டணிவைக்கப்படும் .கருத்துக்கணிப்புகள் ஏற்புடையதல்ல மக்கள் கணிப்பு தான் முக்கியம். மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும், அதிமுக இரட்டை இலை சின்னத்தில் அமோகமாக வெற்றி பெறும். அதிமுக 40 இடங்களிலும் வெற்றிபெறும் அம்மாவோட கனவு உறுதியாகும்". என்றார்.