
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் சக்திநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வந்த இவர், நாளடைவில் மன உளைச்சல் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலைக்கு போனதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக இதற்கான சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் செந்தில்குமாரின் வீட்டுக்கு அருகில் உள்ள பக்கத்து வீட்டு குழந்தைகள் பலர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது 10 வயது சிறுமி ஒருவரை சாப்ட்வேர் இன்ஜினியர் செந்தில்குமார் கத்தி எடுத்து கழுத்தில் அறுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும், குழந்தையின் தாயார் சம்பூர்ணம் ஆகியோரும் ஓடி வந்தனர். அவர்களையும் செந்தில்குமார் தாக்க முயன்றுள்ளார். இதில் தங்கராசு, முத்துவேல் ஆகிய இருவரும் தாக்குதலுக்கு உள்ளாக்கினர். உடனடியாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தங்கராசு, முத்துவேல் ஆகிய இருவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாப்ட்வேர் இன்ஜினியர் செந்தில் குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 10 வயது சிறுமி உட்பட மூன்று பேர் மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.