Skip to main content

தாமரையால் உயிர் இழந்த ஒரு தாய் வயிற்று சகோதரர்கள்...!

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

Brothers passes away while trying to pluck lotus

 

 

கோவில் மேடு பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன்கள் ஆனந்தன் (25), ஹரி (20).  இவர்கள் இருவரும் ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்தனர்.

 

நேற்று ஆனந்தனும், ஹரியும் தனது நண்பர் மதனுடன் சேர்ந்து பேரூர் பகுதிக்கு சென்றனர். பின்னர் காலை சுமார் 10.30 மணி அளவில், பேரூரில் இருந்து நாகராஜபுரம் செல்லும் சாலையில் உள்ள கொலராம்பதி குளக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

மூன்று பேரும் குடிபோதையில் இருந்தனர். அப்போது ஆனந்தனும், ஹரியும் தாமரை எப்படி மலர்ந்து இருக்கிறது அல்லவா? அதைப் பறிப்போமா? எனச் சொல்லிக் கொண்டே குளத்திற்குள் இறங்கி, தாமரை பூவை பறிக்க முயன்றனர்.  அப்போது நீரில் சேறு அதிகமாக இருந்ததால் அவர்கள் மூழ்க துவங்கினர்.

 

இருவருக்கும் சரியாக நீச்சல் தெரியாததால் நீரில் தத்தளித்துக்கொண்டு கத்தத்துவங்கினர். இதையடுத்து குளக்கரையில் நின்றிருந்த நண்பர் மதன், ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ எனக் கூச்சலிட்டார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில், யாரும் இல்லாததால் உடனடியாக யாரும் உதவிக்கு வரவில்லை.

 

சிறிது நேரம் கழித்து மதனின் குரல்கேட்டு அப்பகுதியில் இருந்த ஒரு சிலர் வந்து, நீரில் மூழ்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் இரண்டு பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் இருவரது உடலையும் சேற்றில் இருந்து மீட்டனர்.

 

வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வடவள்ளி சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தலைமையிலான போலீசார் விரைந்துச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கோவை நகரில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருவதால் குளங்களில் தண்ணீர் நிரம்பி அழகாக காட்சி தந்துவருகிறது.  இதனால் குளத்தில் சேறு இருப்பதை அறியாமல் இறங்கி தாமரைப் பூவை பறிக்க முயன்று, தாமரையால் சகோதரர்கள் இருவரும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.