'' Brother, your mustache is very beautiful ... '' - RP Udayakumar turned away!

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23ம் தேதி கூடவிருக்கிறது. இதன் காரணமாக நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மா.செக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அலுவலகத்தின் வெளியே இருந்த தொண்டர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். அதில் சிலர் ஓ.பி.எஸ். தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிமுக செய்தித்தொடர்பாளர் ஜெயக்குமார் ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிவித்தார்.

Advertisment

இது அதிமுக அரசியலில் இன்னும் பரபரப்பைக் கூட்டியது. அதேபோல், நேற்று இரவு திடீரென ஓ.பி.எஸ் முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினர். மேலும், இன்று காலை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ். இருவரும் தனித்தனியே அவர்கள் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். அப்படி ஈ.பி.எஸ் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், மாவட்டச் செயலாளர்கள் விருகை.ரவி, ஆர்.எஸ். ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, தி. நகர் சத்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்த ஆலோசனைக்குப் பின் வெளியே வந்த ஆர்.பி உதயகுமாரிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு, ''ஒருங்கிணைப்பாளரைப் பார்ப்பதில் என்ன இருக்கிறது. எப்பொழுது சந்திப்பது போல் இப்போது சந்தித்துவிட்டு வந்தோம். இதில் என்ன இருக்கிறது'' என்ற ஆர்.பி உதயகுமார் செய்தியாளர் ஒருவரை நோக்கி ''தம்பி உங்க மீசை ரொம்ப அழகா இருக்கிறது. உங்க மீசைக்கு நான் எப்பொழுதும் ரசிகன். பேசிக்கொண்டுதான் இருக்கிறோம், தலைமை என்ன சொல்கிறதோ அதுதான்'' என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.