Skip to main content

சொத்து தகராறு; குடிபோதையில் தம்பியை ஊதுகுழலால் அடித்துக் கொன்ற அக்கா! 

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Brother passes away police arrested his sister in namakkal

 

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள பாலப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன் (53). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு தனபால் என்ற ஒரு மகன் இருக்கிறார். பாண்டியன், மணப்பள்ளியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கீழ் பாலப்பட்டியில் அவருடைய தாயார் வரதம்மாளுடன், அவருடைய அக்காள் ஷியாமளா வசித்து வருகிறார். 

 

கடந்த சில நாள்களுக்கு முன்பு, வரதம்மாள் திடீரென்று உயிரிழந்தார். ஜோதிடர் கூறியதன் பேரில், பாண்டியன் தாய் வீட்டில் தங்கி தினமும் விளக்கேற்றி வந்துள்ளார். செப். 4ம் தேதி காலை பாண்டியனின் அக்காள் ஷியாமளா, தனது தம்பி இறந்து விட்டதாக பாண்டியனின் மகன் தனபாலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தனபால், உடனடியாக கீழ் பாலப்பட்டிக்கு விரைந்தார். அங்கே பாண்டியன், உடலில் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். 

 

இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த தனபால், தனது தந்தையை யாரோ அடித்துக் கொன்று விட்டதாக மோகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

சந்தேகத்தின் பேரில் ஷியாமளாவை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர், குடிபோதையில் தனது தம்பியை ஊதுகுழலால் அடித்துக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். ஷியாமளா, தனது தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். தாயார் இறந்த பிறகு, அந்த வீட்டை சொந்தம் கொண்டாடக்கூடாது என பாண்டியன் அவரை எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே கடந்த ஒரு வாரமாக தகராறு இருந்து வந்தது. 

 

இந்நிலையில், செப். 3ம் தேதி இரவு, அக்காளும், தம்பியும் வீட்டில் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போதும் அவர்களுக்குள் வீட்டை யார் வைத்துக் கொள்வது என்பது குறித்து தகராறு ஏற்பட்டது. பின்னர், போதை தலைக்கேறியதால் பாண்டியன் தூங்கிவிட்டார். தம்பி உயிருடன் இருந்தால் தன்னை வீட்டை விட்டுத் துரத்தி விடுவார் எனக் கருதிய ஷியாமளா, மறுநாள் அதிகாலையில் வீட்டில் இருந்த ஊதுகுழலை எடுத்து அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். 

 

இதில் பலத்த காயம் அடைந்த பாண்டியன், ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்து விட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஷியாமளாவை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சொத்து தகராறில் உடன் பிறந்த தம்பியை, அக்காளே அடித்துக் கொன்ற சம்பவம் மோகனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.