Skip to main content

செங்கல் சூளையில் கஞ்சா செடி வளர்ப்பு... காவல்துறை அதிர்ச்சி...

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

கோவை மாவட்டம் தடாகத்தில் செங்கல் சூளையில் கஞ்சா வளர்த்து விற்பனை செய்து வந்த செங்கல் சூளை தொழிலாளி சின்ன காளை என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

bricks klinn

 

 

கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த தடாகம் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில் அங்குள்ள கே.என்.என் என்ற  செங்கல்சூளையில்  பணிபுரியும் தொழிலாளி சின்னக்காளை  என்பவர்  கஞ்சா செடியை செங்கல்சூளையின் மறைவான பகுதியில்  வளர்த்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் சின்னகாளை  என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது  செங்கல்சூளையின்   உட்பகுதியில் மறைவான இடத்தில் கஞ்சாசெடியை வளர்த்து வந்ததை காவல் துறையினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இதனையடுத்து  கஞ்சா செடியை  பறிமுதல் செய்த போலீசார், சின்ன காளையிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது,  அவ்வப்போது தேவைப்படும்போது கஞ்சா இலைகளை பறித்து காயவைத்து பயன்படுத்திக் கொண்டதும் , கஞ்சா இலைகளை அருகில் உள்ள மற்ற தொழிலாளர்களுக்கு  விற்பனை செய்து வந்ததும்  தெரியவந்தது.  இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சின்னகாளையினை  தடாகம்  காவல்நிலையத்திற்கு  அழைத்து சென்ற போலீசார்  அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ‘ரோடு ஷோ’வைத் தொடங்கினார் பிரதமர் மோடி!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Prime Minister Modi started the 'road show' in Coimbatore

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) பிற்பகல் நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இதற்கிடையே, கோவையின் கண்ணப்ப நகரில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையில் 4 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி இன்று (18-03-24) ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்காக ஏற்கனவே, கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்திருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் அவரச வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதி, “பிரதமர் மோடி மார்ச் 18  ஆம் தேதி கோவைக்கு வருகை தரும்போது, சில நிபந்தனைகளுடன் 4 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஏற்கனவே ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக இன்று (18-03-24) தமிழகம் வந்துள்ளார். பா.ஜ.க. சார்பில் கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கார் மூலம் வாகன அணிவகுப்பு (ரோடு ஷோ) நடக்கும் சாய்பாபா காலனிக்கு சென்றார். அங்கிருந்து கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே, ரோடு ஷோவை பிரதமர் மோடி தொடங்கினார். திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டுள்ளார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் உடன் இருந்தார். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்கிறார். 

Next Story

பிரதமர் மோடியின் பேரணி விவகாரம்; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Justice Anand Venkatesh order by PM Modi rally issue

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. நாளை (16.03.2024) தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் கோவையின் கண்ணப்ப நகரில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையில் 4 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி மார்ச் 18 ஆம் தேதி (18.03.2024) ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்காக கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்திருந்தார். ஏற்கனவே கோவையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதையும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதையும் மேற்கோள்காட்டி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் அவரச வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘பாதுகாப்பு காரணங்கள், பொது நிர்வாகத்தை கருத்தில் கொண்டு தான் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரோடு ஷோ மூலம் பாதிப்பு ஏதும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று (15.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், “இதுபோன்று அனுமதி கேட்கும் எந்த கட்சிக்கும், அமைப்புக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

Justice Anand Venkatesh order by PM Modi rally issue

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ரோடு ஷோவுக்கு அனுமதி அளிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு பிரதமரின் பாதுகாப்பை கவனித்துக்கொள்ளும் நிலையில், பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்தால் ரோடு ஷோவுக்கு எப்படி அனுமதி வழங்கியிருப்பார்கள். ஒரு வேளை பாதுகாப்பு குறைபாடு இருக்குமானால் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவின் மூலமே ரோடு ஷோ நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும்” எனத் தெரிவித்தார். அதற்கு போலீஸ் தரப்பில், “தமிழக போலீஸ் தரப்பில் பேரணிக்கு தங்களிடம் தடையில்லா சான்று கேட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விவகாரத்தில் மாநில காவல்துறைக்கு சமமான பொறுப்பு உள்ளதால் அவற்றை கருத்தில் கொண்டுதான் தற்போது ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.

Justice Anand Venkatesh order by PM Modi rally issue

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “பிரதமர் மோடி மார்ச் 18 ஆம் தேதி கோவைக்கு வருகை தரும்போது, சில நிபந்தனைகளுடன்  4 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டு இது தொடர்பான விரிவான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.