Skip to main content

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம்

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

Bribes to farmers at direct paddy procurement centers!

 

சம்பா பயிர் சாகுபாடியில் நெல் பயிர் லட்சக்கணக்கான ஹெக்டரில் தமிழ்நாடு முழுவதும் பயிர் செய்யப்பட்டுள்ளது. பயிர் செய்யப்பட்ட நெல்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க, இடைத்தரர்களை ஒழிக்க விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேளாண்மைத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல்கொள்முதல் மையம் அமைக்க அரசு முடிவு செய்தது. மாநிலம் முழுவதும் நெல்கொள்முதல் நிலையங்கள் ஒவ்வொரு தாலுகாவிலும் 5 இடங்கள், 6 இடங்களில் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் வாங்கப்பட்டு வருகின்றன. 

 

இந்த நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் நெல் மூட்டைகளைக் கொண்டு வருவதற்கு முன்பு, இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகளின் ஆதார் எண், சிறுகுறு விவசாயிகள் பதிவு எண், மொபைல் எண் போன்றவற்றை பதிவு செய்து அதன்படி சம்மந்தப்பட்ட நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு சென்று விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளைத் தரவேண்டும். அதற்கு உண்டான தொகை நெல்மூட்டைகள் விற்பனையானபின் வழங்கப்பட்டுவிடும். இதற்கு யாராவது லஞ்சம் கேட்டால் சம்மந்தப்பட்ட தாலுகாவின் வட்டாச்சியரை தொடர்புகொள்ளவும் எனச் சொல்லப்பட்டு அதற்கான மொபைல் எண்களும் அறிவிக்கப்பட்டன. 

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் 54 கொள்முதல் நிலையங்கள் அமைக்க மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 47 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. பெரணமல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மோசவாடி கிராமத்தில் அரசின் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எடைபோட்டு, அதனை லாரியில் ஏற்ற தற்காலிக தொழிலாளர்களை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இவர்களுக்கான தினசரி சம்பளத்தை நெல் கொள்முதல் நிலையமே வழங்க வேண்டும். 

 

இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டை ஏற்றும் பணிக்கு சில தொழிலாளர்களை அந்த கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்து அனுப்பியுள்ளார். அவர்களும் விவசாயிகளிடமிருந்த நெல் மூட்டைகளை எடை போட்டு, அதனை தைத்து, லாரியில் ஏற்றியுள்ளனர். இதற்காக ஒரு மூட்டைக்கு விவசாயிகளிடமிருந்து 40 ரூபாய் வசூலித்துள்ளார் ராமகிருஷ்ணன். அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயிடம் ஒரூ மூட்டைக்கு 40 ரூபாய் கேட்டுள்ளார். 40 ரூபாயெல்லாம் தரமுடியாது. ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் இல்லன்னா 20 ரூபாய் தருவன் என்றுள்ளார். 

 

அதற்கு ராமகிருஷ்ணன், “தரமுடியாதுன்னா, உன் மூட்டையை லாரியில் ஏத்த முடியாது உன்னால என்ன பண்ண முடியுமோ செய்துக்க” எனக் கோபமாக பேசியுள்ளார். “நீ எப்படி ஏத்தாம போறன்னு நானும் பார்க்கறன்” என விவசாயியும் பதில் சவால் விடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் அரசு வசூலிக்கச்சொல்லும் தொகையை விட கூடுதலாக வசூலிப்பதாக விவசாய சங்கள், விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வேளாண்மைத்துறை அதிகாரிகளோ, ஆதாரமிருந்தால் தாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம், பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லாதீர்கள் எனத் தெரிவித்துவருகின்றனர்.  

 

தற்போது இந்த வீடியோ ஆதாரம் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என விவசாயிகள் கேள்வி எழுப்பிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடமாடும் நெல் கொள்முதல் வாகனத்தைத் தொடங்கி வைத்த ஆட்சியர்!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
The collector who started the mobile paddy procurement vehicle

 

The collector who started the mobile paddy procurement vehicle

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் கடலூர் மண்டலத்தில் கடந்த 2022- 2023 ஆம் ஆண்டின் பருவத்தில் 258 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு 2 லட்சத்து 44 ஆயிரத்து 62.600 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 31 ஆயிரத்து 950 விவசாயிகள் பயன் அடைந்தார்கள். மேலும் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டங்களில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டு 600.280 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 2023-2024 ஆம் பருவத்திற்கு தொடக்கமாக கடலூர் மாவட்டத்தில் வட்டம் வாரியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோயிலில் - 34, ஸ்ரீமுஷ்ணத்தில் - 35, விருத்தாசலத்தில் - 24, சிதம்பரத்தில் - 9, திட்டக்குடியில் - 15, புவனகிரியில் - 7, குறிஞ்சிப்பாடியில் - 6, வேப்பூரில்- 12, கடலூரில் - 7, பண்ருட்டியில் - 4 ஆக மொத்தம் 153 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் அறுவடை பகுதிக்கு சென்று  22ம் தேதி முதல் விருத்தாசலம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் திறந்துவைக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் சன்னா ரகம் (ஏ கிரேட்) குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரத்து 310, பொதுரகம் (காமன்) குவிண்டால் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரத்து 265 -ம் தரப்படுகிறது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (22.01.2024) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக கே.எம்.எஸ் 2023-24 ஆம் பருவத்திற்கான நடமாடும் நெல் கொள்முதல் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகதீஸ்வரன், வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(விவசாயம்) இரவிச்சந்திரன், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் குமரவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story

தண்ணீரின்றி தவிக்கும் சம்பா நெல் பயிர்; கூடுதல் தண்ணீர் திறப்பை எதிர்பார்க்கும் விவசாயிகள்

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Samba rice crop suffering from lack of water; Farmers expect to open additional water


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் தண்ணீரின்றி  சம்பா நெல் பயிர் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்களைக் காத்திட வீராணம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.

பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள பி.முட்லூர், அகரம், பெரியகுமட்டி, அரியகோஷ்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் சம்பா நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு செய்யப்பட்டு பயிர் நன்றாக வளர்ந்துள்ளது.

இது வீராணம் ஏரி பாசனத்தின் கடைமடை பகுதியாகும். தற்போது பயிர் பால் பருவ கதிர் வரும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இப்பகுதிக்கு பாசனத்துக்கு தண்ணீர் வரும் அரியகோஷ்டி வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் நிலையில் ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த சிறிய அளவிலான மழையால் பயிர் தப்பியுள்ளது. இந்த நிலையில் அப்பகுதி விவசாயிகள் சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து வீராணம் ஏரியில் இருந்து அரியகோஷ்டி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாக வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்த அளவு உள்ள நிலையில் கடந்த 21ம் தேதி அரியகோஷ்டி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்காலில் 22 கி மீ தூரம் கடந்து பரங்கிப்பேட்டை பகுதியான அரியகோஷ்டி, அகரம் ஆகிய கிராம வயல்களை கடந்து வரவேண்டும். ஆனால் தண்ணீர் வரும் வழியில் விவசாயிகள் தண்ணீரை தடுத்து கொண்டம் அமைத்து பாசனம் செய்து வருவதால் கடைமடை பகுதி வரை பாசனத்துக்கு தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடைமடை பகுதியில் உள்ள சம்பா நெல் பயிர் பால் கதிர் வரும் நிலையில் கருகி காய்ந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கடைமடை பகுதிக்கு பாசனத்துக்கு தண்ணீர் வராததால் என்ன செய்துவது என்று தெரியாமல் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வீராணம் ஏரியில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அப்பகுதி விவசாயிகள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கரிகாலசோழன் அரிய கோஷ்டி வாய்க்கால் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் சிதம்பரம் சார்- ஆட்சியரை சந்தித்து வீராணம் ஏரியில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை பாசனத்திற்கு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'நாங்கள் கடைமடை பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். இந்த ஆண்டு மேட்டூரில் தண்ணீர் இல்லாததால் பாசன வாய்க்காலில் வந்த குறைந்தளவு தண்ணீரை வைத்து நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவும் செய்யப்பட்டது. ஏக்கருக்கு ரூ 25 ஆயிரத்து மேல் கடன் வாங்கி செலவு செய்துள்ளோம். ஆனால் தண்ணீர் இல்லாமல் எங்கள் பயிர் காய்ந்து வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன் வயலில் உரம் போட்டுள்ளோம். அந்த உரம் தண்ணீரில் கரைவதற்கு தண்ணீர் இல்லாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் வயலில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்டாண்டாக நாங்கள் விவசாயத்தை செய்து வருகிறோம். வீராணம் ஏரியில் இருந்து அரியகோஷ்டி வாய்க்காலுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்தால் தான் அது கடைமடை வரை பாசனத்திற்கு வரும். எனவே அரிய கோஷ்டி வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாய்க்காலில் வரும் தண்ணீரை மறித்து கொண்டம் கட்டுவதையும் வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏரியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ள நிலையில் நீர் வளத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு கிராமத்துக்கும் முறை வைத்து தண்ணீர் திறக்க வேண்டும்' என்கின்றனர்.