Skip to main content

நகைக்கடன் தள்ளுபடி செய்ய லஞ்சம்? போஸ்டரால் பரபரப்பு!

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

 Bribes to discount jewelry? Excitement by the poster!

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள சின்னப்பண்டாரங்குப்பத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இங்கு சின்னபண்டாரங்குப்பம், செம்பளக்குறிச்சி, பெரியவடவாடி, விஜயமாநகரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த கூட்டுறவு வேளாண் சங்கம் மூலம் மானிய விலையில் உரம், யூரியா, பூச்சி மருந்து மற்றும் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் மற்றும் விவசாயிகளுக்கான பயிர்க்கடன், கரும்பு கடன், விவசாய உபகரணங்கள் மற்றும் விவசாய நகைக்கடன் ஆகியவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க அறிவித்த தேர்தல் வாக்குறுதி அறிவிப்பின்படி, தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்த விவசாயிகளின் நகைக்கடன் 5 பவுன் வரை தள்ளுபடி செய்யப்படும் என உத்தரவிட்டார். அதன்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகை அடகு வைத்த பயனாளிகளுக்குத் திரும்ப நகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

 

இப்பணிகளில் பங்கேற்றுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆகியோர் பயனாளிகளிடம் நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கு 1,000 ரூபாய் லஞ்சம், பயிர்க் கடன் தள்ளுபடிக்கு 3 ஆயிரம்  ரூபாய் லஞ்சம், பயிர் கடன் தள்ளுபடிக்கு மூட்டைக்கு 100 ரூபாய் லஞ்சம் என வசூலித்து வருவதாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னபண்டாரங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் மீது அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்திற்குப் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக்கோரி போஸ்டர் மூலம் தங்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விருத்தாசலம், மங்கலம்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் 'நகைக்கடன் தள்ளுபடி செய்ய லஞ்சம். தமிழக முதல்வர் அறிவித்த நகைக்கடனை தள்ளுபடி செய்ய 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு தள்ளுபடி செய்து வருகிறார்கள். அதேபோல் பயிர் கடனுக்கு 3,000 ரூபாய், உரம் வழங்க மூட்டைக்கு 100 ரூபாய் என லஞ்சம் வசூலித்து வருகிறார்கள். தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 3 வருடத்திற்கு முன்பு மாடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு, கடந்த 2 வருடத்திற்கு முன்பு வட்டி செலுத்தாத நகைக்கடன்களுக்கு நகைகளை ஏலம் விடுவதில் முறைகேடுகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது விருத்தாசலம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.