“Breastfeeding does not cause breast cancer” - Dean of Trichy Government Hospital

Advertisment

உலக தாய்ப்பால் வாரம் இன்று முதல் கடைப்பிடிக்க உள்ள நிலையில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவம், முறையாகத் தாய்ப்பால் கொடுக்காததால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் இந்த பேரணியில் செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் நேரு கலந்து கொண்டு இந்த பேரணியைத் துவக்கி வைத்தார். பேரணி அரசு மருத்துவமனையிலிருந்து எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா வரை சென்று பின்னர் மீண்டும் அரசு மருத்துவமனை வந்து அடைந்தது.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவமனை முதல்வர் நேரு, “தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. ஊட்டச்சத்து குறைவை ஏற்படுவதையும் தடுக்கலாம். பிரசவத்துக்கு பின்பு பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறைகிறது. மார்பக புற்று நோய் ஏற்படுவதை தடுக்கிறது. தாய்ப்பால் கொடுப்பதை நம் அனைவரும் ஊக்குவிக்க வேண்டும். திருச்சி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் சேமிப்பு வங்கி உள்ளது. தேவையான அளவு தாய்ப்பால் உள்ளது. வெளியில் உள்ள மருத்துவமனைக்கும் தேவைப்படும் பட்சத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

குரங்கு அம்மை நோய்க்கு மருத்துவமனைகள் தற்போது 8 படுக்கையில் கொண்ட சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் ராஜமகேந்திரன் என்பவரை மருத்துவரை நியமித்து கண்காணித்து வருகிறோம். தாய்ப்பால் கொடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கிராமப் பகுதியில் அதிகம் உள்ளது. நகரப் பகுதிகளில் குறைவாக உள்ளது. பெண்கள் தங்களை அழகு குறைந்து போகும் எனத் தவறான கருத்தில் உள்ளனர். அதிலிருந்து அவர்கள் வெளியே வர வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக புற்றுநோய், பால் தேக்கத்தால் ஏற்படும் மார்பக கட்டி ஆகியவை அவர்களுக்கு வராது” எனத் தெரிவித்தார்.