Skip to main content

பெண்ணாடம் அருகே கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை மற்றும் அம்மன் தாலிகள் திருட்டு!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

 Breaking the temple lock near Pennadam and stealing the idol and goddess thali!

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள இறையூரில் ஸ்ரீதேவி பூதேவி உடனுறை அருள்மிகு அழகிய மணவாளப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தர்மகர்த்தாவாக இருந்து கோயிலைக் கவனித்து வருகிறார்.

 

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (04.02.2021) கோயிலில் அனைத்துப் பூஜைகளையும் முடித்து இரவு கோயிலைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டார். நேற்று (05.02.2021) காலை, கோயிலைத் திறப்பதற்கு வந்துள்ளார். அப்போது கோயில் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டு, கோயில் திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து  அப்பகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து பொதுமக்களுடன் சேர்ந்து கோயில் உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலுக்குள் இருந்த 2 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான ஆஞ்சநேயர் சிலை, பெருமாள் நெற்றியில் இருந்த கால் கிலோ எடைகொண்ட வெள்ளியிலான நாமம், மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த 4 தாலிகள் (2 பவுன்) ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. திருடுபோன ஐம்பொன் சிலை, பல லட்சங்கள் மதிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து பெண்ணாடம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததன் பேரில் அங்கு விரைந்து சென்ற பெண்ணாடம் போலீசார், திருட்டுச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து, அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 6 மாத காலத்தில் பெண்ணாடம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கோயில்களில் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மாவட்டக் காவல்துறை நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும்  என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.