publive-image

Advertisment

சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த சிறுமி, உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். சில காலம் கழித்து அவரது தாய் அவரை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்தச் சிறுமி, வீட்டில் ஜோதிகா நடித்து வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தைப் பார்த்துள்ளார். அந்தப் படத்தில் ‘எது நடந்தாலும் தாயிடம் சொல்ல வேண்டும்’ எனும் வசனம் வரும். அதனைக் கண்ட சிறுமி, தனது உறவினர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத்தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அச்சிறுமியின் தாய், ராயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து, அவ்வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததது.

இந்த செய்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஜோதிகா, ‘அமைதியை உடையுங்கள். ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காகக் குரல் கொடுத்தால், அவள் அனைத்து பெண்களுக்காகவும் பேசுகிறாள் என்று பொருள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.