
திருச்சி மாவட்டம், மணப்பாறை பட்டி ஐயப்பன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(50) இவர் டி.என்.எஸ்.டி.சி. கரூர் டெப்போவில் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பொட்டு மணி(42), மணப்பாறையில் உள்ள கார்மெண்ட்ஸ் கடையில் கடந்த 7 வருடமாக துணி தைக்கும் பணி பார்த்து வருகிறார். இவரது 23 வயது மகளும் திருச்சி தில்லைநகரில் ஒரு ஐ.டி. கம்பனியில் வேலை பார்க்கிறார்.
மேற்படி மூவரும் காலையில் வேலைக்கு சென்றுள்ளனர். வழக்கமாக வேலைக்கு செல்பவர்கள் வீடு திரும்புவதற்கு இரவு 8 மணி ஆகிவிடும். ஆனால் இன்று மாலை 4.30 மணிக்கெல்லாம் சுப்பிரமணியனின் மனைவி வீட்டிற்கு வந்த போது வீட்டின் வெளி இரும்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டும், வீட்டின் கதவும், பீரோவின் பூட்டும் உடைக்கபட்டு அதில் வைக்கபட்டிருந்த 8.5 சவரன் நகை மற்றும் 50,000 ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளார்.
இதுகுறித்து மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு வந்த அவர்கள் வழக்குப் பதிவு செய்து, கைரேகை நிபுணர்கள் உடன் மாதிரிகளை சேகரித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.