
திருப்பத்தூர் விஷமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எலக்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரும் அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்(20) ஒருவரும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், பெண்ணின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தனது காதலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக இளைஞர் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், “நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம். ஆனால் வெவ்வேறு சமூகம் என்பதால் எங்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், நாங்கள் இருவரும் மேஜர் என்பதால் இரு வீட்டார் சம்மத்துடன் திருமணம் செய்து கொள்ள இதுநாள் வரை நாங்கள் காத்திருந்தோம். ஆனால், எங்கள் விருப்பத்தை ஏற்காத பெண் வீட்டார், எங்கள் திருமணத்திற்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நான் விரும்பிய பெண்ணை அவர்களது குடும்பத்தார் மறைத்து வைத்து என்னுடன் பேச விடாமல் தடுத்து வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எனது காதலியை பார்ப்பதற்கு அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். ஆனால், அவரை பார்க்க அனுமதிக்காமல் பெண்ணின் வீட்டார் என்னைச் சரமாரியாக தாக்கி அடித்து விரட்டினர். மேலும் அவரை எங்கேயோ அழைத்துச் சென்று விட்டுவிட்டனர். இனி அவரை என்னால் பார்க்க முடியாது என்கின்றனர். அதனால் பெண் வீட்டார் மீது எனக்குச் சந்தேகம் எழுகிறது. நான் காதலிக்கும் பெண்ணின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அதனால் அவரை மீட்டுக் கொடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.