
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(19). இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அபிநயா என்ற இளம்பெண்ணும் அதே கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். அப்போது இருவரும் ஒரு கல்லூரி என்பதால் ஆகாஷுக்கும், அபிநயாவிற்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாற இருவரும் செல்போன்களின் நீண்ட நேரமாக பேசி நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கோடை விடுமுறை என்பதால் இருவரும் தங்களது வீட்டில் தற்காலிகமாக வேலை செய்யச் சென்னை செல்கிறோம் என்று கூறிவிட்டு விழுப்புரத்தில் இருந்து கிளம்பியுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை வந்த ஆகாஷ் - அபிநயா இருவரும் புதிதாக திருமணமான ஜோடி என்று கூறி பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களின் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது ஆகாஷ் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதுகுறித்து அதிச்சியடந்த அவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது ஆகாஷ் பிணமாகத் தொங்கியதோடு, அபிநயா அருகே ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இருவரது உடலையும் மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விடுமுறைக்காக வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வந்த இருவரும் வீடு எடுத்து கணவன் மனைவி போன்று வாழ்ந்துள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஆகாஷ் காதலின் அபிநயாவை கடுமையாக தாக்கியுள்ளார். அதில் அபிநயா உயிரிழந்ததைத் தொடர்ந்து ஆகாஷும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.