
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அஸ்விதா(19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரவீன் என்ற இளைஞருடன் மாணவி அஸ்விதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியிருக்கிறது.
கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் பிரவீன் அஸ்விதாவிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவி தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தைத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பிரவீனுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நேற்று பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் அஸ்விதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையறிந்த பிரவீன் நேற்று வீட்டிற்குள் நுழைந்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வறுபுத்தியிருக்கிறார். ஆனால் அதற்கு அஸ்விதா மறுப்பு தெரிவிக்கவே, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றிருக்கிறார். மாணவியின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தந்தை கண்ணனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அஸ்விதாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே அவர் உயிரிழ்ந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே அஸ்விதாவை கொலை செய்த பிரவீன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.