The boy who cried when he saw his grandmother passes away

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள சிங்கனூர் ஊரைச் சேர்ந்தவர் ஏழுமலை(60). இவர், திண்டிவனம் நகரில் உள்ள ஒரு கம்பெனியில் செக்யூரிட்டியாக பணி செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி(55). இவர்களுக்கு வெங்கடேசன், பிரபாகரன், பிரகாஷ் என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணமாகி அதே ஊரில் தனித் தனியாக வசித்து வருகின்றனர். ஏழுமலை அவரது மனைவி செல்வியும் தனியாக வசித்து வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. அதேபோல், நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் படுத்து தூங்கியுள்ளனர். அவர்களுடன் அவர்களது ஐந்து வயது பேரனும் படுத்து தூங்கியுள்ளார். இந்த நிலையில், நள்ளிரவில் சிறுநீர் கழிக்க எழுந்த சிறுவன், தனது பாட்டி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி சத்தம் போட்டு அழுதுள்ளார். இவரது அழுகுரல் கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது செல்வி ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார்.

Advertisment

குடும்ப பிரச்சனை காரணமாக செல்வியை அவரது கணவர் ஏழுமலையே அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதற்கிடையே மனைவியை கொலை செய்த ஏழுமலை, திண்டிவனம் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று சரணடைந்துள்ளார். நடந்த சம்பவங்களை அவர் போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இதுகுறித்து திண்டிவனம் ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா, நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளார். மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏழுமலையை கைது செய்த போலீசார், அவரிடம் கொலை குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.