Skip to main content

“ஆண்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை”- செக்யூரிட்டி தடுத்ததால் டவரில் ஏறிய வாலிபர்!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

 The boy who climbed the tower because the security blocked


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ளது அற்பிசம்பாளையம் முத்தியால் பேட்டை. இந்த ஊரைச் சேர்ந்தவர் லட்சுமணன்(35). கூலித் தொழிலாளியான இவரது மனைவி புனிதா(31). இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது பிரசவத்திற்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. புனிதாவிற்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் புனிதாவின் கணவர் லட்சுமணன் தனது மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்தது குறித்துக் கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்த மகிழ்ச்சியுடன் தமது குழந்தையைக் காண்பதற்காக நேற்று காலை 8 மணியளவில் மருத்துவமனை வளாகத்திற்குள் சென்றுள்ளார்.

 

அங்கிருந்த செவிலியர்களிடம் லட்சுமணன் தனது மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது எங்கள் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று கூறி படியே பிரசவ வார்டு பகுதிக்குள் சென்றுள்ளார். அங்குப் பாதுகாப்புக்கு இருந்த செக்யூரிட்டி ஒருவர் பெண்கள் பிரசவ வார்டு பகுதிக்குள் பெண்களை மட்டுமே அனுமதிக்க முடியும் ஆண்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை எனக்கூறி லட்சுமணனைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால்  லட்சுமணனுக்கும் செக்யூரிட்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபமுற்ற லட்சுமணன் தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க உள்ளே சென்ற தம்மை உள்ளே விடாமல் தடுத்ததைப் பொறுக்க முடியாமல் மருத்துவமனை வளாகத்திலிருந்த செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 

அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவமனை புறக்காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் விரைந்து வந்து செல்போன் டவர் மீது ஏறி மிரட்டல் விடுத்த லட்சுமணனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறக்கி அழைத்துச் சென்று அவரது மனைவி குழந்தையைப் பார்க்க அனுமதித்தனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.