Skip to main content

மணல் குவாரி நீரில் சிக்கி பலியான சிறுவன்; மயிலாடுதுறை அவலம்

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

Boy passed away for trapped in sand pit

 

சாலைக்கு மண் எடுக்கிறோம் என்கிற பெயரில் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகள் ஒவ்வொன்றும் மரணக் குழிகளாக மாறி பச்சிளம் குழந்தைகளை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.

 

மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி ஆரப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கௌதம். 13 வயதான இந்த சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். சக நண்பர்களோடு சேர்ந்து கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள எஸ்.பி.எல் என்கிற நிறுவனத்திற்கு சொந்தமான மணல் குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் நீச்சல் அடித்துக் குளித்துள்ளனர். நிலைக்க முடியாத ஆழத்திலும் சேற்றிலும் சிக்கிய கெளதமை கூட வந்த சக நண்பர்கள் மீட்கப் போராடியுள்ளனர். ஆனாலும் அந்த சிறுவனை பிணமாகவே மீட்க முடிந்திருக்கிறது. இதனை கேள்விப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரும் ஊர்மக்களும் திரண்டு சென்று சடலமாக கிடந்த சிறுவனின் உடலை கண்டு கண்ணீர் விட்டுக் கதறி அழுது புரண்டனர். 

 

Boy passed away for trapped in sand pit

 

ஒட்டுமொத்த கிராம மக்களும் திரண்டு, “இனி ஒரு உயிர் கூட இந்த பகுதியில் போகக்கூடாது. ஏற்கனவே பல உயிர்கள் மணல் குவாரியால் போய்விட்டது. உடனே குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும். தோண்டப்பட்ட இடங்களுக்கு பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டும்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கம்போல் பூம்புகார் காவல்துறையினர் ஒருபுறம் மிரட்டல், மறுபுறம் அடக்குமுறை, இன்னொரு புறம் அமைதிப் பேச்சுவார்த்தை என மணல் குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்ததோடு சிறுவனின் உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

அங்கு சிறுவனின் தந்தையும் தாயும் கதறி அழுத அவலம் அனைவரது மனதையும் உடைத்தது. “நேற்று தான் என் புள்ளைக்கு புது பேக், புது செருப்பு, புது வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வந்தோம். இன்னைக்கு ஸ்கூல் போக வேண்டிய புள்ள பிணமா சுடுகாட்டுக்கு போறானே. பாவிங்க, இனி ஒரு பிள்ளையும் காவு வாங்கிடாத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்கனும்” என கண்ணீர் வடித்தனர்.

 

இது குறித்து சமூக ஆர்வலரும் கீழப்பெரும்பள்ளத்தை சேர்ந்தவருமான இளஞ்செழியன் கூறுகையில், “எங்க கிராமம் படிப்பறிவு இல்லாத பாமர மக்கள் அதிகம் வசிக்கிற கிராமம். கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி என்பதால் மணல் மாபியாக்கள் எங்கள் பகுதியை குறிவைத்து தோண்டுகின்றனர். எங்கு திரும்பினாலும் கடல் போல் உருவாக்கி விட்டனர். ஒரு காலத்தில் மூன்று போகம் விளைந்த பூமி. தனியார் பவர் பிளாண்ட் நிறுவனத்தினர் அனைத்து நிலங்களையும் விலைக்கு வாங்கி தரிசு போட்டு இங்குள்ள அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடித்தனர். தரிசாகக் கிடந்த நிலங்களை திமுக பிரமுகர் ஒருவரது துணையோடு அனைத்து நிலங்களையும் விலைக்கு வாங்கிய மணல் மாஃபியாக்கள் விவசாய நிலங்கள் முழுவதையும் படுபாதாளத்திற்கு தோண்டி மண் எடுத்து விற்கின்றனர்.

 

Boy passed away for trapped in sand pit

 

50 மீட்டர் இடைவெளியில் குவாரிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பது விதி. 3 அடி ஆழத்திற்கு மேல் எடுக்கக் கூடாது என்பது விதி. இந்த விதிகள் அப்பாவி மக்களுக்கு மட்டும் தான் பொருந்தும் போல. இது போன்ற மணல் மாபியாக்களுக்கு கிடையாது என்பதற்கு எங்க கிராமமே சாட்சி. ஒரே கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்குது. அனைத்தும் மன்னார்குடியைச் சேர்ந்த ஒருவருக்கே சொந்தமானது. அத்தனையும் பலரது பெயரில் பினாமியாக நடத்தி வருவதாகச் சொல்லுறாங்க. ஒரு கிராமத்தையே அத்திப்பட்டி போல் அழிப்பது அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் போவது மர்மமாக இருக்கிறது. ஏற்கனவே ஒரு குழந்தை தண்ணீரில் விழுந்து இறந்துவிட்டது. இரண்டாவது சிறுவன். இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது என்பது எங்க கிராமத்தின் நிலைபாடு. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற குவாரிகளை இழுத்து மூட வேண்டும்” என்கிறார் ஆத்திரம் பொங்க.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.