Skip to main content

பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த சிறுவன்... அதிர்ந்துபோன மருத்துவர்கள்!! 

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

The boy who came to the hospital with the snake .... the doctors who were shocked

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கு பாலன். இவரது மகன் மணிகண்டன் (வயது 16). இவர் அதே கிராமத்திலுள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்துவருகிறார். இவர் நேற்று (16.06.2021) காலை, கிராமத்திலுள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் கிடந்த பெரிய கற்களின் மீது அமர்ந்து தன்னை மறந்து செல்ஃபோனில் வீடியோ காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் அமர்ந்திருந்த கற்களின் இடையிலிருந்து 3 அடி நீளம் கொண்ட விஷப்பாம்புகள் இரண்டு ஊர்ந்து வந்து சிறுவன் மணிகண்டனின் காலைச் சுற்றிகொண்டு பின்னர் கடித்துள்ளன.

 

அதன் பிறகு வீடியோ காட்சி பார்த்துக்கொண்டிருந்த அவரது கவனம் கலைந்தது. பின்னர் காலில் என்ன கடித்தது என்று பார்த்தபோது பாம்பு இரண்டு சுற்றிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். காலை உதறியவுடன் ஒரு பாம்பு  ஓடிவிட்டது. உடனே சத்தம் போட்டு அழுதுள்ளார். இவரது அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். உடனடியாக ஊர் இளைஞர்கள் மணிகண்டனை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை நோக்கி புறப்பட்டனர். அந்த நேரத்திலும் அந்தச் சிறுவன் தன்னைக் கடித்த பாம்புகளில் ஒன்றை உயிருடன் கையில் பிடித்து, அதை ஒரு பையில் போட்டுக்கொண்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

 

மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள், சிறுவன் மணிகண்டன் தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததைக் கண்டு வியப்படைந்தனர். உடனடியாக அந்தச் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்து விஷமுறிவு ஊசி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் மணிகண்டன் சிகிச்சை பெற்றுவருகிறார். தன்னைக் கடித்த பாம்பைத் துணிச்சலுடன் பிடித்துப் பையில் போட்டு எடுத்துக்கொண்டு சிகிச்சைக்கு வந்த அந்தச் சிறுவனின் துணிச்சலைக் கண்டு மருத்துவமனை ஊழியர்களும் பொதுமக்களும் வியப்படைந்தனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

தற்போது இளைஞர்கள் பலரும் தங்கள் கையில் ஆண்ட்ராய்டு செல்ஃபோனை வைத்துக்கொண்டு அதன்மூலம் வீடியோ காட்சிகள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் வரும் சம்பவங்களைப் பார்ப்பது, அதில் வரும் வீடியோ காட்சிகளைப் பார்ப்பது, சிலர் செல்ஃபோனில் திரைப்படம் பார்ப்பது என அதிகப்படியான நேரத்தை அந்த செல்ஃபோனிலேயே கழிக்கின்றனர். அவ்வாறு இருக்கையில் அக்கம்பக்கத்தில் என்ன நடக்கிறது  என்பதைப் பற்றி சிறிதளவு கூட  உணர்வு இல்லாமல்  தங்களை மறந்து  செல்ஃபோனில் மூழ்கியுள்ளதால், ஊர்ந்து வந்த பாம்பு காலைச் சுற்றிக்கொண்டு கடித்ததைக் கூட மணிகண்டன் கவனிக்கவில்லை. இதன்மூலம் எந்த அளவுக்குத் தங்களை மறந்து சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் செல்ஃபோனில் மூழ்கியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.