Skip to main content

திருநங்கையரின் கண்ணீர்க் கதைகள்! லதா சரவணனின் ’காலநதியில் சித்திரப்பாவைகள்’ நூல் வெளியீடு!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

 


பிரபல நாவலாசிரியரும் எழுத்தாளருமான லதா சரவணன், எழுதி பாவைமதி பதிப்பகம் வெளியிட்ட ’காலநதியில் சித்திரப்பாவைகள்’ என்ற வாழ்வியல் நூலின் வெளியீட்டு விழா  15.7.2019 மாலை, சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவனில் சிறப்புற நடந்தது. இந்த நூல்,  திருநங்கையரின் வாழ்வியல் காயங்களைச் சொல்லும் அனுபவக் கதைகளின் தொகுப்பாகும். அதனால் ஏராளமான திருநங்கையரும், பொதுமக்களும், இலக்கிய அன்பர்களும், ஊடகத்துறையினரும் பெருமளவில் திரண்டிருந்தனர். 


குத்துவிளக்கேற்றும் வைபவத்துடன் விழா தொடங்கியது. எழுத்தாளர் கமலக்கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தியதோடு நிகழ்சியையும் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். கவிஞர்கள் அஸ்வின், பெருமாள் ஆச்சி, அமுதா தமிழ்நாடன் ஆகியோர் திருநங்கையர் பற்றிய தங்கள் கவிதைகளை வழங்கினர். 

 

book release


அடுத்து லதா சரவணனின் ‘காலநதியில் சித்திரப்பாவை’ நூலை ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் வெளியிட, அதை பதிப்பாளர் முனைவர் பாட்டழகன் பெற்றுக்கொண்டார். ’கைத்தடி பதிப்பகம்’ கவிஞர் நாஞ்சில் இன்பா, தனது கவிதை நடைச் சொற்பொழிவால், நூலைத் திறனாய்வு செய்தார். அடுத்து விழாவின் சிறப்பு அழைப்பாளரான நடிகர் எஸ்.வி.சேகர், லதாவின் எழுதும் வேகத்தைப் பாராட்டிவிட்டு  ”‘இலவச பேருந்துப் பயணம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை ஆட்ட்சியாளர்கள் திருநங்கையருக்கு வழங்கவேண்டும் என்று குரல்கொடுத்தவன் நான். திரைபடத்தில் இவர்களை கேலிக்குரியவர்களாக சித்தரிக்கிறார்கள். அந்த சித்தரிப்பிற்கும் இவர்களின் நிஜ வாழ்க்கையும் நிறைய வேறுபாடு உண்டு. இவர்கள் நம் சக மனிதர்கள் என்ற எண்ணம் நமக்கு வேண்டும்” என்றார்.  கூடவே ’பான் டு வின்’ அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் ரூபாயைத் தான் வழங்குவதாக அறிவித்தார்.


 

திரைப்படத் தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பனோ ‘ஒவ்வொரு மனிதருமே ஒரு நேரத்தில் ஆணாகவும் ஒரு நேரத்தில் பெண்ணாகவும் வெளிப்படுவாரகள். அது இயல்பு. இவர்கள் எந்த வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்ல. எனவே திருநங்கையரை நம்மிடமிருந்து பிரித்துப் பார்க்கக்கூடாது. அவர்கள் நம்மில் ஒருவர்” என்றார் அழுத்தமாய். 
 

மதிப்பிற்குரிய மங்கை பானு தன் பேச்சில் “எங்களுக்கு யாரும் இரக்கம் காட்டத் தேவையில்லை. உங்களில் ஒருவராக மதித்தால் போதும். மூன்றாம் பால் என்று எங்களைப் பிரிக்காதீர்கள். தனிமைப்படுத்தாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார்.  
 

நூலை வெளியிட்ட நீதியரசர் வள்ளிநாயகம் ‘திருநங்கையரின் வாழ்க்கைத் தரம் வேதனை தருவதாக இருக்கிறது. அவர்கள் அவர்களுக்கான உரிமையைப் பெறவேண்டும். அவர்கள் எந்தவகையிலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்ல. அவர்களை நம்மிடமிருந்து பிரித்துப்பார்க்கக் கூடாது. அவர்கள் நம்மிள் ஒருவர்” என்றார் ஆழ்ந்த பார்வையோடு.

 

book release


லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜா ராகவன் லதாவின் எழுத்தாற்றலைப் பாராட்டிவிட்டு சாதனைகள் மூலம் திருநங்கையர்கள் தங்கள் ஆற்றலை நிரூபித்து வருகிறார்கள் என்றார். ம.தி.மு.க. மல்லை சத்யாவோ சுவையான குட்டிக தைகளைச் சொல்லி,  இன்று பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்திருப்பது குறித்த தன் கவலையை வெளியிட்டார். திருநங்கையருக்காக தங்கள் இயக்கம் தொடர்ந்து குரல்கொடுத்து வருவதையும் அவர் பதிவு செய்தார். 
 

நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் தன் உரையில் ”திருநங்கையரின் சமூக நீதிபோராட்டம் ஆண்டாண்டுகாலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.  இருட்டிலேயே இருந்த திருநங்கையருக்குக் கலைஞர் ஆட்சிக்காலத்தில் வாரியம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு, அவர்கள் விடியலை நோக்கிப் பயணிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. இவர்கள் தங்கள் உரிமையைச் சட்டத்தின் துணையோடு நிலைநாட்ட வேண்டும். அதுதான் நிலையான தீர்வைத் தரும்’ என்றார் அழுத்தம் திருத்தமாய். 

 

book release


’காலம் தோறும் திருநங்கையருக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது சங்ககால இலக்கியங்களும் அவர்களை இழிவு செய்கின்றன. அறவெளிச்சத்தை ஏந்திய வள்ளுவன் கூட திருநங்கையரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவில்லை. லதா சரவணன் போன்றவர்களின் எழுதுகோல் அவர்களுக்காகப் பிராயசித்தம் தேடும் வகையில் எழுதுகின்றன. காயம்பட்டவர்களுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் எழுக்தப்படும் எழுத்தே தலைசிறந்த எழுத்து’ என்றார், நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன்.


 

இதைத்தொடர்ந்து விதைக்காவலர் வானவன் மழை நீர் சேமிப்பு குறித்து பேசினார். நூலாசிரியர் லதா சரவணனின் ஏற்புரைக்குப் பின் வடசென்னைத் தமிழ் இளைஞர் கழகப் பொறுப்பாள்ர் பன்னீர்செல்வம் நன்றியுரை வழங்கினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் லதா சரவணன் விருதுகளையும் நினைவு பரிசுகளையும் வழங்கிச் சிறப்பித்தார்.

 

book release



விழாவில் பாவையர் மலர் ஆசிரியர் வான்மதி, ’பார்ன் டு வின்’ ஸ்வேதா, ராணி இதழ் ஆசிரியர் ராமகிருஷ்ணன், ஒன் இண்டியா ஆசிரியர் அறிவழகன்,  மா.க.சிவஞானம், எழுத்தாளர் லதா, முனைவர் நா.நளினிதேவி, கவிஞர் கன்னிக்கோயில் ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 
ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்களையும் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியிருப்பதோடு திருநங்கையரின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் எழுத்தாளர் லதா சரவணன், பலரின் கவனத்தையும் பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறார். அரங்கில் வைக்கப்பட்டிருந்த அவரது மகள்களான அனிதா, அபிநயா ஆகியோரின் பென்சில் ஓவியங்களும் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.

-சூர்யா


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.