மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக முடங்கியிருந்த மின் உற்பத்தி தற்போது முழு அளவில் தொடங்கி உள்ளது.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட ஒரு அலகு செயல்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் நாளொன்றுக்கு 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
இந்நிலையில், ஜன. 16ம் தேதி, இரண்டாவது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டது. இதையடுத்து பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. மின் விநியோக மையத்தின் வேண்டுகோளின்படி முதல் பிரிவில் 1வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. இதற்கிடையே, 5 நாள்களுக்குப் பிறகு ஜன. 21ம் தேதி முதல் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் முதல் பிரிவில் உள்ள நான்கு அலகுகளில் 840 மெகாவாட் மின்சாரம் முழுமையாக உற்பத்தி தொடங்கியது.
அதேபோல் இரண்டாவது பிரிவிலும் கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து, அங்கும் முழுமையான அளவில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.