Skip to main content

23 நாட்களுக்கு பிறகு மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கைதியின் உடல்...

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

The body of the prisoner was re-examined and buried 23 days later

 

 

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வம் (எ) செல்வமுருகன்(40). இவருக்கு பிரேமா என்ற மனைவியும்,  மதன்(26) என்ற மகனும், 12 வயது மகளும் உள்ளனர். முந்திரி வியாபாரம் செய்துவந்த இவர்கள், தொழில் சம்பந்தமாக சொந்த ஊரான காடாம்புலியூரிலிருந்து நெய்வேலி இந்திராநகர் பகுதியில் வசித்து வந்தனர். 

 

இந்நிலையில் கடந்த 28.10.2020 அன்று நெய்வேலி பிளாக் எண் 26-ல் காவியா என்ற பெண் அணிந்திருந்த செயினை பறித்ததாக செல்வமுருகன் மீது நெய்வேலி வடக்குத்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு 30.10.2020 அன்று விருத்தாசலம் கிளைச்சிறையில் சிறைப்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து 02.11.2020 அன்று செல்வமுருகனுக்கு வலிப்பு நோய்  ஏற்பட்டதாகக் கூறி சிறைத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து, பின்பு மீண்டும் கிளைச் சிறைக்கு அழைத்துச் சென்றனர். மீண்டும் 04.11.2020 அன்று இரவு வலிப்பு ஏற்பட்டதாகக்கூறி செல்வமுருகன் அரசு மருத்துவமனைக்கு மீண்டும்  கொண்டு செல்லப்பட்டார். அப்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி பிரேமாவுக்கும், நெய்வேலி மற்றும் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. மேலும் காவல்துறையினர்  குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஆனந்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில், குற்றவியல் நடுவர் ஆனந்த், வீடியோ ஆதாரத்துடன் செல்வமுருகன் மனைவி, மகன், மகள் மற்றும் அவரது உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். பின்னர் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த செல்வமுருகன் உடலை உறவினர்கள் முன்னிலையில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் செல்வமுருகன் சடலம்  பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது. 

 

அதேசமயம் செல்வமுருகன் மனைவி பிரேமா, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி,  காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் ஆகியோரிடம், 'தனது கணவர் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், காவல்துறையினர் துன்புறுத்தியதால்தான் உயிரிழந்ததாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் புகார் மனு அளித்தார். அத்துடன் உறவினர்களுடன் 06.11.2020 அன்று சென்னை - கும்பகோணம் சாலையில் காடாம்புலியூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

இதனிடையே 'காவல்துறையினர் துன்புறுத்தியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாகவும், அவரது இறப்பிற்கு நீதி மற்றும் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க வேண்டும்' என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

 

அதேசமயம்  விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த், தொடர்ந்து விசாரணை செய்து வந்தார். அதேபோல் கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மனித உரிமை ஆணையமும் விசாரணை செய்து வருகிறது. மேலும் செல்வமுருகன் மனைவி பிரேமா கோரிக்கை வைத்ததன் பேரில் டி.ஐ.ஜி திரிபாதி, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு சி.பி.சி.ஐ.டி  துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) குணவர்மன் தலைமையிலான போலீசாரரும் விசாரணை செய்து வருகின்றனர். 

 

இதனிடையே சிறைக்கைதி மரணத்தில் கைதியின் குடும்பத்தினரால் குற்றம் சாட்டப்பட்ட நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகத்தை சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தொய்வு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று கூறி கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.  

 

அதேசமயம் தனது கணவர் சாவில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும் கூறி செல்வமுருகனின் மனைவி பிரேமா, சடலத்தை வாங்காமல் இருந்து வந்தார். மேலும் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரி பிரேமா தொடர்ந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'விருத்தாசலம் குற்றவியல் நீதிபதி இதுகுறித்து முடிவெடுக்கலாம்'  என்று கூறி கடந்த 18-ஆம் தேதி வழக்கினை முடித்து வைத்தது.

 

அதையடுத்து பிரேமா, 'மறு உடற்கூறு ஆய்விற்கு உத்தரவு வழங்கக்கோரியும், மறு உடற்கூறாய்வினை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செய்ய வேண்டும் என்றும்,  ஆய்வின்போது மருத்துவ பேராசிரியர் ஒருவர், 2 மருத்துவர்கள், தான் மற்றும் தனது வழக்கறிஞர் என 5 நபர்கள் இருக்க உத்தரவு வழங்க கோரியும் விருத்தாசலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த், 'ஜிப்மர் மருத்துவமனையில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் மறு உடற்கூறாய்வு செய்வதற்கான வாய்மொழி உத்தரவு அளித்தார். 

 

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் செல்வமமுருகனின் சடலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து புதுச்சேரி  ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

 

அதையடுத்து நேற்று மதியம் செல்வமுருகன் சடலம் மறு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்னிலையில்,  ஜிப்மர்  மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த மருத்துவ பரிசோதனையில் பிரேமா மற்றும் அவரது வழக்கறிஞர், உறவினர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். உடற்கூறு ஆய்வு முழுவதும் வீடியோ பதிவு எடுக்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணயளவில் செல்வமுருகனின் சடலம், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சடலம் அவரது சொந்த ஊரான காடாம்புலியூர் கொண்டுவரப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

செல்வமுருகன் இறந்து 23 நாட்கள் கழித்து அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.