ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கல்லூரி மாணவி கிணற்றில் சடலமாக மூட்டை கட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கொங்கர்பாளையம் அடுத்துள்ள தண்டுமாரியம்மன் கோவில் அருகில் இருக்கும் தனியார் தோட்டத்தில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட ஏதோ ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பங்களாபுதூர் போலீசார் மூட்டையை கைப்பற்றி சோதனையிட்டதில் அதில் இளம்பெண் ஒருவரின் சடலம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக உடலானது கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் கிணற்றில் சாக்கு மூட்டையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது கோபிசெட்டிபாளையம் அரசு கலை கல்லூரியில் பயின்று வந்த சுவேதா என்பதும் அவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது.
கடந்த 28ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் மாணவியின் தாய் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இரண்டாம் ஆண்டு பயின்று வந்த சுவேதா அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கொங்கர்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற மாணவனை காதலித்து வந்தது தெரியவந்தது. கல்லூரி இறுதியாண்டை முடித்த லோகேஷ் சிறுவலூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவ்வப்போது சுவேதாவை தனிமையில் சந்தித்துள்ளார் லோகேஷ். இதனால் சுவேதா கர்ப்பமாகியுள்ளார்.
ஆனால், ஒரு கட்டத்தில் சுவேதாவை நிராகரித்துவிட்டு அவர் பணியாற்றி வந்த அலுவலகத்தில் மற்றொரு பெண்ணை லோகேஷ் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இதை எப்படியோ தெரிந்து கொண்ட சுவேதா இது குறித்து லோகேஷிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி லோகேஷின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தனது வாழ்க்கைக்கு நியாயம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். அப்பொழுது அவரை சமாதானம் செய்த லோகேஷ் அவர் சாப்பிடுவதற்காக உணவு வாங்க உணவகத்திற்கு சென்றதாகவும் அப்போது சுவேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கைது செய்யப்பட்ட லோகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது உடலை மறைப்பதற்காக கை, கால்களை கட்டி சாக்கு மூட்டையில் அடைத்து பைக்கில் வைத்து தூக்கிச் சென்று அருகில் உள்ள விவசாய கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டுதல், சடலத்தை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் லோகேஷை கைது செய்துள்ளனர்.