Skip to main content

மதுரை மின் மயானத்தில் வரிசையாக பிணங்கள்..! கள நிலவரம் என்ன..?

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

Bodies lined up at Madurai Electric Cemetery ..! What is the domain status?

 

மதுரை, கீரைத்துறை மின் மயானத்தில் வரிசையாக பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போன்ற காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, கரோனா குறித்த தேவையற்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்திவருகிறது. அதன் உண்மை நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்து ஆய்வுசெய்தோம்.

 

மதுரையில் கரோனா காலத்திற்கு முன்பு சராசரியாக 15 - 25 இறப்புகள் பதிவாகிவந்தன. தற்போது கரோனா பாதிப்பின் காரணமாக இரட்டை இலக்கத்தில் இறப்புகள் பதிவாகிவருகின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் 62 பேர் கரோனாவால் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை கூறுகிறது. ஆக, சராசரி இறப்புகள், கரோனா இறப்புகள், கரோனா அல்லாத இறப்புகள் என நாளொன்றுக்கு சராசரியாக 60 மரணங்கள் பதிவாகிவருகின்றன. மதுரை மாநகராட்சியைப் பொறுத்தவரைக்கும் தத்தனேரி, கீரைத்துறை ஆகிய இரண்டு இடங்களில் மின் மயானங்கள் இயங்கிவருகின்றன. தற்போது, தத்தனேரி மயானத்தில் மட்டும் அதிகமான பிணங்களும், கீரைத்துறை மயானத்தில் குறைவான பிணங்களும் எரிக்கப்பட்டுவந்தன. அரசு மருத்துவமனையில் இறக்கும் நபர்களின் உடல்களை மொத்தமாக தத்தனேரி மயானத்திற்கே கொண்டு செல்லாமல், கீரைத்துறை மயானத்திற்கும் பிரித்து அனுப்பும்படி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

 

அதன்படி, இரண்டு நாட்களாக பிணங்கள் பிரிக்கப்பட்டு கீரைத்துறை மயானத்தில் எரிக்கப்படுகின்றன. இந்த மயானம் ரோட்டரி கிளப் சார்பில் இயங்கிவருகிறது. இரவில் எரியூட்டும் பணிகள் நடைபெறுவதில்லை என்பதாலும், பிணங்களைப் பதப்படுத்திவைக்கும் குளிர்சாதன பெட்டிகள் இல்லாததாலும் அங்கு பிணங்கள் தேங்கியுள்ளன. அப்படி, 11.05.2021 அன்று வந்து தேங்கியிருந்த பிணங்கள்தான் அந்த வீடியோ காட்சியில் இருப்பவை. 11.05.2021 அன்று மட்டும் 45 பிணங்கள் கீரைத்துறை மயானத்தில் எரியூட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், கீரைத்துறை மயானத்தில் 24 மணி நேரமும் எரியூட்டும் பணிகள் நடைபெற துவங்கியுள்ளதாகவும், குளிர்சாதன பெட்டி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்த மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், மக்கள் அந்த வீடியோவால் தேவையற்ற அச்சம் அடைய தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.