போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாங்கிய வெங்காய போண்டாவில் பிளேடு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கலில் உள்ள விளாம்பட்டி காவல் நிலையத்தில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கனகராஜ். இவர் தனது மகன் மற்றும் இரண்டு பேத்திகளுடன் விளாம்பட்டி போலீஸ் குடியிருப்பில், வசித்து வருகிறார். தனது பேத்திகளுக்காக நிலக்கோட்டை பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு கடையில் வடை, போண்டா வாங்குவது வழக்கம். அதன்படி, நேற்று காலை அந்தக் கடையில் ஐந்து வெங்காய போண்டாவை வாங்கியுள்ளார். பின்னர், அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று தனது பேத்திகளுக்குக் கொடுத்தார். ஒரு பேத்தி, போண்டாவை பிரித்துப் பார்த்தபோது அதிர்ந்து போனார். ஏனெனில், அந்த போண்டாவிற்குள் ஒரு முழு பிளேடு இருந்தது. உடனே, அந்தச் சிறுமி, தனது தாத்தாவிடம் அந்த போண்டாவை காட்டியுள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கனகராஜ், உடனடியாகத் தனது மற்றொரு பேத்தியிடம் இருந்த போண்டாவையும் பிரித்துப் பார்த்தார். ஆனால், மற்ற போண்டாவில் அப்படி எதுவும் இல்லை.
இதுகுறித்து நிலக்கோட்டை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ரமேஷுக்கு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தகவல் தெரிவித்தார். அதன் பிறகு, அவர் போண்டா வாங்கிய கடைக்கு வந்த பாதுகாப்புத் துறை அதிகாரி ரமேஷ், கடையில் விசாரணை நடத்தினார். விசாரணையில், போண்டாவில் எப்படி பிளேடு இருந்தது என்று தனக்கு எதுவும் தெரியாது என போண்டாவை தயாரித்த ஊழியர் தெரிவித்தார். இதனையடுத்து, அஜாக்கிரதையாகச் செயல்பட்ட தொழிலாளியை உணவுப் பாதுகாப்புத் துறையினர் எச்சரித்தனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, இதேபோல் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் குழந்தைக்கு வாங்கிய சாக்லேட்டில், 'பீடித் துண்டு' இருந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிலக்கோட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாங்கிய போண்டாவில் பிளேடு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.