திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சர்க்கரை உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. பருவ கால தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவேண்டாம் என ஆலையை நிர்வகிக்கும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியான 150 தொழிலாளர்கள் ஆலையை தொடர்ந்து சர்க்கரை உற்பத்தி செய்ய வேண்டும், தங்களது 4 மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நவம்பர் 21ந்தேதியோடு ஆறாவது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisment

black flag to be raised against Chief Minister

போராட்டத்தை கைவிட வேண்டுமென ஊழியர்களை ஆம்பூர் தாசில்தார் உட்பட அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஊழியர்களோ, இந்த சர்க்கரை ஆலைக்கு வரும் கரும்புகளை மற்ற ஆலைகளுக்கு அனுப்பிவிட்டு இந்த ஆலையை மூட வேண்டியதன் அவசியம் எதனால் வந்தது. அரசாங்கத்தோடு சேர்ந்து ஆலை நிர்வாகம் ஏதோ தவறு செய்கிறது, தொழிலாளர்களை ஏமாற்ற நினைக்கிறது. உடனே ஆலையை திறந்து உற்பத்தியை தொடங்க ஆணை வெளியிட வேண்டும் அதுவரை போராட்டம் செய்வோம் என்றுள்ளார். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது எனச்சொல்லி அதிகாரிகள் திரும்பி சென்றுள்ளனர்.

அதேநேரத்தில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு முன்பாக அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை முதல் ஆலைக்கு வெளியே காவல்துறையின் 4 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆலைக்குள் புகுந்து தொழிலாளர்களை கைது செய்து சிறையில் அடைக்க திட்டமிடுகிறார்களோ என தொழிலாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Advertisment

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மீண்டும் சர்க்கரை உற்பத்தி தொடங்காவிட்டால், வரும் 28ந்தேதி புதிய மாவட்டம் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, திருப்பத்தூர் நகருக்கு வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ் ஆர் தேவதாஸ் அறிவிப்பு செய்துள்ளார்.