புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் சோதனை நடத்தி வந்தனர். டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. ஏற்கெனவே இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் எம்.பி., தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து அமலாக்கத்துறை இதுவரை 9 முறை சம்மன் அனுப்பியது. அவை அனைத்தையும் அவர் நிராகரித்தார். ஆனால், விசாரணைக்கு ஆஜரானால் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தினாலேயே அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
நேற்று இரவு 8 மணியளவில் புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் சோதனை நடத்தினர். சோதனைக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகளால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தேர்தல் நேரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கைதுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், ‘கெஜ்ரிவால் கைதுக்கு பாஜகவின் தேர்தல் தோல்வி பயமே காரணம். இந்த கைதின் மூலம் இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.