bjp sv sekar chennai high court

Advertisment

தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், தமிழக முதல்வர் குறித்து பேசியதற்கும் வருத்தம் தெரிவித்துள்ள பா.ஜ.க. நிர்வாகி எஸ்.வி சேகர், தன் வாழ்நாள் முழுவதும் இனி ஒருபோதும் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாத மனுத் தாக்கல் செய்துள்ளார்.

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவிப் போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத்தான் ஆகஸ்டு 15- ஆம் தேதி ஏற்றப்போகிறாரா? தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டிவிட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்றப்போகிறாரா? என்கிற வகையில் பேசி வீடியோ வெளியிட்டார்.

Advertisment

bjp sv sekar chennai high court

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க. நிர்வாகி எஸ்.வி.சேகருக்கு எதிராக, சென்னைநுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், வழக்கில் காவல் துறையினர் தன்னைக் கைது செய்யக் கூடும் எனக் கூறி, எஸ்.வி.சேகர், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் சார்பில் ஆஜரான மாநில தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என எஸ்.வி.சேகர் உத்தரவாதம் அளிப்பதோடு, நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கலாம் என்றும், அதே நேரத்தில் வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (03/09/2020) மீண்டும் நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் சார்பில் வருத்தம் தெரிவித்து உத்தரவாத மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அவரது வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த மனுவில், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், தமிழக முதல்வர் குறித்து பேசியதற்கும் வருத்தம் தெரிவித்துள்ள பா.ஜ.க. நிர்வாகி எஸ்.வி.சேகர், தன் வாழ்நாள் முழுவதும், இனி ஒருபோதும் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வழக்கு விசாரணையை, வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை எஸ்.வி. சேகரை கைது செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.