Skip to main content

விடுதலைச் சிறுத்தைகள் பலமானவர்கள்... எங்களுக்குப் பயமாக உள்ளது..! - ஈரோடு எஸ்.பி.யிடம் பா.ஜ.க புகார்!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020

 

BJP Southern District Treasurer files complaint VCK

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தங்களைக் கற்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஈரோடு மாவட்ட பா.ஜ.க பொருளாளர் ஈரோடு மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

 

ஈரோடு பெருந்துறை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பா.ஜ.க.வின் தெற்கு மாவட்டப் பொருளாளர் தீபக்ராஜா. இவர் இன்று 27ஆம் தேதி ஈரோடு எஸ்.பி. தங்கதுரையிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். 

 

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெண்களை இழிவாகப் பேசியதாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சமயத்தில் அவர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே திருமண நிகழ்ச்சிக்கு வருவதை அறிந்து, அவரை கைது செய்யாததைக் கண்டித்து கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தோம். 

 

பிறகு எனது ஊரான கந்தசாமியூர் அருகே ரோட்டின் ஓரமாக எனது காரை நிறுத்திவிட்டு கட்சி நிர்வாகிகளான சண்முகம், ரகுபதி ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத நபர்கள் எனது வாகனத்தையும், எங்களையும் கற்களால் தாக்கினார்கள். இதில், சண்முகத்திற்கும், ரகுபதிக்கும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டது. எனது காரும் சேதமானது. பின்னர், அந்த நபர்கள் என்னையும், ரகுபதியையும் அடையாளம் காட்டி இன்னும் ஒரு வாரத்தில் தீர்த்துக்கட்டி விடுவோம் என மிரட்டும் வகையில் பேசிக்கொண்டு சென்றனர். 

 

திருமாவளவன் மற்றும் அவரது கட்சியினரிடம் அரசியல் செல்வாக்கு, பண பலம், ஆள்பலம் உள்ளதால் எங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது. எனவே, அந்த நபர்களால் எங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க சட்டப்படி எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். எங்களை மிரட்டிய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

 

இந்த நிலையில், 27ஆம் தேதி, திருமாவளவனை கைது செய்யக் கோரி ஈரோட்டில் பா.ஜ.க மகளிரணி ஆர்பாட்டம் நடத்தியது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.