அதாவது, மத்திய சென்னை மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தமிழக காங்கிரஸ் மாஜி தலைவர் அரசரின் தீவிர ஆதரவாளர். தேர்தல் பணிகளின்போது இவருக்கும், தி.மு.க., மாவட்ட செயலாளர் சேகர்பாபுவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதை ஒரு காரணமாக காட்டி திருச்சிக்கு பறந்துவிட்டார் வீரபாண்டியன்.
இதேபோல் மாஜி மாவட்ட தலைவர் ரங்கபாஷியம் தலைமையில் சென்னையை சேர்ந்த இளங்கோவன் ஆதரவாளர்கள் அனைவரும் தேனியில் குவிந்துவிட்டனர். இதனால் வட மற்றும் மத்திய சென்னை தொகுதிகளில் காங்கிரஸ் மந்தமாகவே இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் வடசென்னை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கலாநிதியை ஆதரித்து பிரசாரத்தில் இறங்கினார் மாஜி மத்திய அமைச்சர் சிதம்பரம். அப்போது தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவரான காங்கிரஸை சேர்ந்த வி.எஸ்.ஜே.தினகரன் தனது படை, பரிவாரங்களுடன் சிதம்பரம் பேசிக்கொண்டிருந்த மேடையை நோக்கி ஏற தயாரானார்.
அப்போது அவரை தி.மு.க., மாவட்ட செயலாளர் சேகர்பாபு தடுக்கவே, சலசலப்பு ஏற்பட்டது. இதனால் சீறிய சிதம்பரம் ‘யாரும் மேடையை நோக்கி வரவேண்டாம்’ என எச்சரிக்கை விடுத்தார். ’கப்சிப்’ ஆன தினகரன் அங்கிருந்து நடையை கட்டினார்.
தினகரனின் சகோதரர் சீனிவாசன் பா.ஜ.க.,விலும், சித்தப்பா வி.எஸ்.பாபு அ.ம.மு.க.,விலும் இருக்கிறார்கள். இவர்கள் எப்படியாவது தேர்தலை சீர்குலைக்கவேண்டும் என்பதற்காக தினகரனை பகடைக்காயாக பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் போர்வையில் இருக்கும் தினகரனும் சமயம் கிடைக்கும்போதெல்லாம், அதற்கான வேலைகளில் களம் இறங்கி வருகிறாராம்.
இதை மெல்ல மெல்ல உணர்ந்துகொண்ட காங்கிரஸ் நிர்வாகி கள் இப்போது தினகரனை ஓரங்கட்ட துவங்கி இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல. அவரின் திரைமறைவு வேலைகளை பட்டியல் போட்டு, டெல்லி மேலிடத்துக்கு பெட்டிஷன்களை வேகமாக தட்டி விடுகிறார்கள்.