Skip to main content

எட்டுவழிச்சாலை விவகாரம்: பாஜகவை கண்டித்து சேலத்தில் உண்ணாவிரத போராட்டம்!

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

 


எட்டுவழிச்சாலை திட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த நடுவண் பாஜக அரசைக் கண்டித்து, சேலத்தில் ஒரே நாளில் நான்கு இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

e


சென்னை & சேலம் இடையே புதிதாக எட்டுவழிச்சாலைத் திட்டத்தை பத்தாயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இத்திட்டம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அமைகிறது. இதற்காக இம்மாவட்டங்களில் இருந்து மொத்தம் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் அதிமுக அரசு ஈடுபட்டது.


இவ்வாறு கையகப்படுத்தப்படும் நிலத்தில் பெரும்பகுதி ஆண்டுக்கு இருபோகம் விளைச்சல் தரக்கூடிய விளை நிலங்கள் என்பதால், நிலம் எடுக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் காவல்துறை பலத்துடன், அடக்குமுறைகளைக் கையாண்டு நிலத்தைக் கையகப்படுத்தி முட்டுக்கற்களை அதிகாரிகள் நட்டனர்.


இதற்கிடையே, இத்திட்டத்தை எதிர்த்து ஒரு தரப்பினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 8ல், இத்திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், எட்டுவழிச்சாலையால் விவசாயிகளுக்கு பலன் இல்லை என்றும், திட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக சமூக பொருளாதார காரணிகளை ஆய்வு செய்யாதது ஏன் என்றும் வினா எழுப்பி இருந்தது.

 

e


இது ஒருபுறம் இருக்க, கடந்த மே 20ம் தேதி சேலம் வந்த எடப்பாடி ப-ழனிசாமி, எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு 7 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார். அதுதான், மீண்டும் இப்பிரச்னை விசுவரூபம் எடுக்க மூலாதாரமாக மாறிப்போனது. ஆனால் முதலில் இத்திட்டத்தை ஒரு சதவீதம் பேர்தான் எதிர்க்கின்றனர் என்று கடந்த ஆண்டு திருவாய் மலர்ந்திருந்த எடப்பாடி, பின்னர் 11 சதவீதம் பேர் எதிர்ப்பாக கூறினார். இப்போது அதை 7 சதவீதமாக குறைத்திருக்கிறார். இப்படி தன் மனதில் தோன்றிய எண்ணைக் குறிப்பிட்டு, அதுதான் எதிர்ப்பு சதவீதம் என்று விமான நிலையத்தில் நின்றபடியே சொல்லிவிட்டுப் போவது விவசாயிகள் மத்தியில் மேலும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.


கடந்த சில நாள்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நடுவண் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனால் சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் நடுவண் மற்றும் மாநில அரசுகளுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.


நடுவண் அரசின் மேல்முறையீட்டு நடவடிக்கையைக் கண்டித்து, சேலத்தில் உத்தமசோழபுரம், நாழிக்கல்பட்டி, ராமலிங்கபுரம், ஆச்சாங்குட்டப்பட்டி ஆகிய நான்கு இடங்களில் திங்கள் கிழமையன்று (ஜூன் 3) ஒரே நேரத்தில் விவசாயிகள், ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வாயில் கருப்புத்துணி கட்டியும், கருப்புக்கொடி காட்டியும் எதிர்ப்பை பதிவு செய்தனர். தவிர, பல இடங்களில் விவசாயிகள் அவரவர்களின் சொந்த விளை நிலங்களில் இருந்தவாறே கருப்புக்கொடி காட்டி கண்டனம் தெரிவித்தனர். இந்தப் போராட்டங்களில் பெண்கள் பெருமளவில் திரண்டு வந்து கலந்து கொண்டிருந்தனர்.


மற்ற மாவட்டங்களைக் காட்டிலும், முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால், சேலம் மாவட்ட விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றனர். நடுவண் அரசு மேல்முறையீட்டு மனுவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதே போராட்டக் குழுவினரின் மைய நோக்கமாக இருக்கிறது. எனினும், அவர்கள் தமிழகத்தில் எந்த இடத்தில் இயற்கை வளங்கள் பாதிக்கும் திட்டங்களை கொண்டு வந்தாலும் அவற்றை எதிர்க்கும் முடிவையும் சேலம் விவசாயிகள் புதிதாக கையிலெடுத்துள்ளனர்.


இது தொடர்பாக, ஆச்சாங்குட்டப்பட்டியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான குப்பனூர் நாராயணனிடம் பேசினோம்.


''சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கனிம வளங்களை சுரண்டி கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்காகவே எட்டுவழிச்சாலைத் திட்டத்தைக் கொண்டு வர பாஜக, அதிமுக அரசுகள் முயற்சிக்கின்றன. எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டம் என தமிழ்நாட்டை குறிவைத்தே பாஜக அரசு இத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 


இப்படி இயற்கை வளங்களை சூறையாடினால் தமிழகம் ஒருகாலக்கட்டத்தில் சோமாலியா போல் சோற்றுக்கே கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படும். வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும்தான் எட்டுவழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் எடப்பாடி கூறுகிறார். விவசாயத்தை அழித்து, அதன்மூலம் கிடைக்கக்கூடிய வளர்ச்சியும், நலனும் எங்களுக்கு வேண்டாம் என்றுதானே நாங்கள் போராடுகிறோம். நாங்களே வேண்டாம் என்று சொல்லும்போது யாருடைய நலனுக்காக இத்திட்டத்தை கொண்டு வருகிறார்கள்? 


மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு படுதோல்வியைக் கொடுத்தோம் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பையும் மீறி, தமிழர்களை பழிவாங்கும் நோக்கில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த பாஜக அரசு முயற்சிக்கிறது. எட்டுவழிச்சாலைத் திட்டம் ஒரு அழிவுத்திட்டம் என்று உயர்நீதிமன்றம் சொல்லி இருக்கும் நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. உடனடியாக இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மேல்முறையீட்டு வழக்கை திரும்பப்பெற வேண்டும்,'' என்றார் நாராயணன்.


உத்தமசோழபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றொரு ஒருங்கிணைப்பாளரான மோகனசுந்தரம் கூறுகையில், ''எட்டுவழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்தும் முன், சமூக பொருளாதார காரணிகளை அலசி ஆராயவில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. அப்படி இருக்கும்போது, அதை எதிர்த்து பாஜக அரசு மேல்முறையீடு செய்திருப்பது விவசாய நலன்களை புறக்கணிப்பதாகவே பார்க்கிறோம். இது மன்னராட்சி காலமல்ல. அடுத்து உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தல்களும் வரும் என்பதை அதிமுக, பாஜக அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். 


இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக, பாஜகவை ஓட ஓட விரட்டி அடிப்போம். நானும் ஒரு விவசாயி எனக்கூறும் எடப்பாடி பழனிசாமி, இதுவரை ஒருமுறைகூட விவசாயிகளை அழைத்து நேரடியாக கருத்துக் கேட்காதது ஏன்? சொந்த மாவட்ட விவசாயிகளைக்கூட அவர் நேரில் சந்திக்க மறுப்பது ஏன்? கார்ப்பரேட் முதலாளிகளிடம் வாங்கிய கமிஷனுக்காகவே இந்த திட்டத்தை கொண்டு வர பாஜக துடிக்கிறது. இந்த நாசகார திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோவதோடு, சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றமே சொன்னாலும் இத்திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம். எட்டுவழிச்சாலைத் திட்டத்தை தடுத்து நிறுத்த எந்த விதமான போராட்டத்திற்கும் தயாராகி விட்டோம்,'' என படபடவென பொறிந்து தள்ளினார்.


இந்நிலையில் நடுவண் அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது. இந்த தீர்ப்பு, விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


எதற்காக எட்டுவழிச்சாலை? என்ற வினாவுக்கு உரிய பதில் கிடைக்கும்வரை விவசாயிகளின் கிளர்ச்சியை தவிர்க்க இயலாது. நடுவண், மாநில அரசுகள் மவுனம் காப்பதால் எந்த பயனும் இல்லை.
 

சார்ந்த செய்திகள்

Next Story

எட்டுவழிச்சாலையை எதிர்த்து விவசாயிகள் குடும்பத்தோடு உண்ணாவிரதம்!

Published on 06/01/2019 | Edited on 06/01/2019
protest

 

சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை அமைப்பதன் மூலம் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாய நிலங்கள் பெரியளவில் பாதிப்படைகின்றன. அதனால் இந்த திட்டத்தை கைவிடவேண்டும்மென அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்கின்றன.

 


இந்த 8 வழிச்சாலையால் திருவண்ணாமலை மாவட்ட விவசாய நிலங்கள் அதிகளவில் பாதிப்படைகின்றன. இதனை கண்டித்து திருவண்ணாமலை, செங்கம், சேத்பட், செய்யார் பகுதிகளில் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தில் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் அப்பகுதியை சேர்ந்த சுமார் 100க்கும் அதிகமான விவசாயிகள், தங்களது குடும்பத்தோடு ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.

 


எடுக்காதே, எடுக்காதே எங்களது நிலங்களை எடுக்காதே, பறிக்காதே, பறிக்காதே எங்கள் வாழ்வாதாரத்தை பறிக்காதே என குரல் எழுப்பியபடி, கையில் தட்டி ஏந்திக்கொண்டு உண்ணாவிரதம்மிருந்து வருகின்றனர்.

 


 

Next Story

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: எடப்பாடியின் மூக்கை உடைத்த விவசாயிகள்!

Published on 20/12/2018 | Edited on 20/12/2018

எட்டுவழிச்சாலைக்கு நிலம் கொடுக்க மறுத்து, சேலத்தில் ஒட்டுமொத்தமாக விவசாயிகள் திரண்டு வந்து புதன்கிழமையன்று ஆட்சேபனை மனு வழங்கினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி 11 சதவீதம் பேர்தான் எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பதாக கூறிவந்த நிலையில், விவசாயிகள் ஒற்றுமையாக செயல்பட்டு அவருடைய மூக்கை உடைத்துள்ளனர்.

 

 

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் சேலம் முதல் சென்னை வரை எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. இத்திட்டத்துக்காக பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

 

 Opponents to eight way road: farmers who broke the eps nose!

 

இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலப்பரப்பை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. சேலம் மாவட்டத்தில் மட்டும் 18 கிராமங்களில் 186 ஹெக்டேர் தனியார் பட்டா நிலங்கள் உள்பட மொத்தம் 248 ஹெக்டேர் நிலம் இந்தத் திட்டத்தால் பறிபோகின்றன.

 

 

எட்டு வழிச்சாலைக்காக எடுக்கப்பட உள்ள நிலத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலமானது, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குச் சொந்தமானதாகும். அவை இருபோகம் விளைச்சல் தரக்கூடியவை. இதனால் தொடக்கம் முதலே விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

 Opponents to eight way road: farmers who broke the eps nose!

 

கஞ்சமலை, கவுந்திமலை, வேடியப்பன் மலைகளில் உள்ள கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்காகவும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக மட்டுமே இத்திட்டம் கொண்டு வரப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், எட்டுவழிச்சாலைத் திட்டம் என்பது முற்றிலும் வணிகப்பயன்பாட்டுக்கானது என்றும் வரைவு அறிக்கையில் சொல்லப்பட்டு உள்ளது. இழப்பீட்டுத் தொகை பற்றிய அறிவிப்பிலும் நம்பகத்தன்மை ஏற்படவில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் விவசாயிகள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 

 

 

இந்நிலையில்தான், கடந்த 15.12.2018ம் தேதியன்று ஓமலூரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு 11 சதவீதம் மக்கள்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 89 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்,' என்று கூறினார். 

 

 Opponents to eight way road: farmers who broke the eps nose!

 

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இத்திட்டத்திற்கு எதிராக களமாடி வரும் விவசாயிகள், முதல்வரின் எட்டுவழிச்சாலை ஆதரவு பேச்சால் மேலும் கொதிப்படைந்தனர். அவருக்கு தங்களின் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்யும் வகையில், முதல்கட்டமாக சேலம் மாவட்டத்தில் புதன்கி-ழமையன்று (19.12.2018) விவசாயிகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆட்சேபனை மனுக்களை வழங்கினர். 

 

 

நிலவாரப்பட்டி, பூலாவரி, வீரபாண்டி, நாழிக்கல்பட்டி, மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி, குப்பனூர், பருத்திக்காடு, ஆச்சாங்குட்டப்பட்டி, உத்தமசோழபுரம், அரியானூர், சித்தனேரி, வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை 10 மணியளவில், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடினர். 

 

 Opponents to eight way road: farmers who broke the eps nose!

 

விவசாயிகள் அங்கே ஒன்று கூடக்கூடாது என்றும், பேரணியாகச் செல்ல அனுமதியில்லை என்றும் காவல்துறையினர் அவர்களை எச்சரித்தனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, விவசாயிகள் அங்கேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக தரையில் அமர்ந்து அரசுக்கு எதிராக முழ க்கங்களை எழுப்பினர். பொறுமையி-ழந்த காவல்துறையினர் அவர்களை பேரணியாகச் செல்ல அனுமதித்தனர்.

 

 

விவசாயிகள் பேரணியாக பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வள்ளுவர் சிலை, ராஜாஜி சிலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பல விவசாயிகள் கரும்பு மற்றும் கோரிக்கை அட்டைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். பேரணியில் முதல்வருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

 

 

ஆட்சியரக வளாகத்திற்குள் அனுமதிக்கும் முன்பாக விவசாயிகளில் யாராவது மண்ணெண்ணெய் பாட்டில் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களுடன் வந்துள்ளனரா என்பதை காவல்துறையினர் சோதனை செய்த பிறகே ஆட்சியரக வளாகத்திற்குள் அனுப்பினர். 

 

 

காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை, உதவி ஆணையர்கள் ராஜா காளீஸ்வரன், சுந்தரமூர்த்தி, ஈஸ்வரன், ஆய்வாளர்கள் சரவணன், நாகராஜன், குமார், பிரேமலதா, ஷர்மிளாபானு ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டிருந்தனர். 

 

 

விவசாயிகளிடம் இருந்து ஆட்சேபனை மனுக்களை பெறுவதற்காக நிலம் எடுப்பு வட்டாட்சியர்கள் தலைமையில் ஐந்து அலகுகளாக பிரிக்கப்பட்டு, அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர். முதல் அலகில் 92 பேரும், இரண்டாவது அலகில் 150  பேரும், மூன்றாவது அலகில் 40 பேரும், நான்காவது அலகில் 34 பேரும், ஐந்தாவது அலகில் 48 பேரும் ஆட்சேபனை மனுக்களை வழங்கினர். அதாவது மொத்தம் 364 பேர் எட்டுவழிச்சாலைக்கு எதிராக ஆட்சேபனை மனுக்களை வழங்கினர்.

 

 Opponents to eight way road: farmers who broke the eps nose!

 

இதையடுத்து விவசாயிகள், எத்தனை பேர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு என்ற விவரங்களை அதிகாரிகள் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, ஆட்சியரக வளாகத்திலேயே தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 

ஒரே நபருக்குச் சொந்தமாக பல சர்வே எண்களில் நிலங்கள்¢ இருப்பதால், ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் தனித்தனியாக ஆட்சேபனை மனுக்கள் தருமாறு அதிகாரிகள் கூறினர். அதற்கு விவசாயிகள், 'நாங்கள் கொடுத்த ஒரே ஆட்சேபனை மனுவில் சர்வே எண்களை பிரித்து எழுதி இருக்கிறோம். அவற்றை எண்ணிப்பார்த்து எத்தனை சர்வே எண்தாரர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகக் கணக்கிட்டுச் சொல்லுமாறு கூறினர். 

 

 

இதனால் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர். அப்போதும் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவர்களை கைது செய்வதற்கும் காவல்துறையினர் தயாராக வாகனங்களை கொண்டு வந்தனர். பின்னர் விவசாயிகள், ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் தனித்தனியாக ஆட்சேபனை மனுக்களை தருவதற்கு ஒப்புக்கொண்டனர்.  

 

 

இதையடுத்து ஐந்து அலகுகளிலும் சேர்த்து மொத்தம் 556 ஆட்சேபனை மனுக்களை வழங்கியுள்ளனர். எட்டுவழிச்சாலைக்காக சேலம் மாவட்டத்தில் 725 சர்வே எண்களுக்கு பாத்தியப்பட்ட நிலங்களை கையகப்படுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி கணக்கிட்டால் 76.68 விவசாயிகள், எட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை மனு கொடுத்துள்ளது ஊர்ஜிதமாகியுள்ளது. 

 

 

அதிமுகவை சேர்ந்த விவசாயிகள், மிகச்சிறிய அளவில் நிலம் வைத்திருப்போர் உள்ளிட்ட பிரிவினர் இன்றைய பேரணியில் கலந்து கொள்ளவில்லை. எனினும், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மூக்கை உடைத்துவிட்டதாகவும் சேலம் விவசாயிகள் கூறினர்.