Skip to main content

விநாயகர் சிலை எங்கே? ஆட்சியரிடம் எகிறிய பாஜகவினர்

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

BJP people besieged Pudukkottai District Collectorate

 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா பொறுப்பேற்று சில வாரங்களே ஆன நிலையில் பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினர் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

 

மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளது. அந்த சிலையை உடனே மீண்டும் வைக்க வேண்டும் என்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் பா.ஜ.கவினர் சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினர் பலர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலிசார் குவிக்கப்பட்டு பாஜகவினரை தடுத்து நிறுத்தினார்கள். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா பாஜகவினரை சந்தித்தார். அப்போது, முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அங்கேயே உள்ளது. அகற்றப்பட்டதாகவும் சிதைக்கப்பட்டதாகவும் வதந்தி பரவுகிறது என்று கூறியுள்ளார்.

 

வெளியே வந்த பாஜகவினரோ.., ‘முகாம் அலுவலக வளாகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளது. பாஜகவினர் பிரச்சனையை கிளப்பியதும் அவசர அவசரமாக தோட்டத்தில் புதிய பீடம் அமைத்து விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் வைக்கப்பட வேண்டிய மர பீடத்துடன் வெளியில் வைக்கப்பட்டுள்ளதால் மழை, வெயிலுக்கு அந்த மர பீடம் சிதிலமடையும்’ என்றனர்.

 

BJP people besieged Pudukkottai District Collectorate

 

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்துவிட்டதாக தவறான தகவல் வாட்ஸாப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸாப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொன்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி மதச்சார்பற்று நடந்து வரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம் கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளதுடன் விநாயகர் சிலை தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள படத்தையும் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் பாஜகவினர் வெளியிட்டுள்ள வீட்டிற்குள் உள்ள விநாயகர் சிலை படத்தை யார் வெளியில் அனுப்பியது என்பது பற்றியும் சைபர் கிரைம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.