மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது என வலியுறுத்தி ஏற்கனவே கடந்த 6 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று கேள்வி நேரத்தின் மீதான விவாதத்தின் பொழுது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். பிளஸ் டூ மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்வது ஏற்புடையதல்ல. மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்'' என வலியுறுத்தி இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்தின் முன்மொழிவை தமிழக வாழ்வுரிமை கட்சி, கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழக எதிர்க்கட்சியான அதிமுகவும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ள நிலையில் இந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜக சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தது. பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.