
மதுரை தங்கராஜ் சாலையில், 1986ஆம் ஆண்டு முதல் செயல்படும், அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம், ரூ.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடமாகக் கட்டப்பட்டது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இக்கட்டிடத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் ஆட்சியர் அன்பழகன், ஆணையர் விசாகன் ஆகியோர் பங்கேற்று ஆய்வு செய்தனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், “பீகார் தேர்தலில் வெற்றிபெற்ற நிதிஷ்குமார் மற்றும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்.
அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் மதுரை நன்றாக வளர்ந்துள்ளது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் மதுரை மாவட்டத்தில் ரவுடிகள் மட்டுமே வளர்ந்தனர். தி.மு.க ஆட்சிக் காலத்தில், ஸ்டாலின் மதுரைக்கு வர பயப்பட்டார். பீகார் தேர்தல் காரணமாக வெங்காயம் கொண்டு வர முடியாததால், தமிழகத்தில் வெங்காய விலை உயர்ந்துள்ளது.
தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடத்த முடியாத கூட்டுறவுத்துறை தேர்தலை அ.தி.மு.க ஆட்சியில், 2 முறை நடத்தி முடித்துள்ளோம். தி.மு.க ஆட்சிக் காலத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டன. அ.தி.மு.க அரசின் வளர்ச்சி திட்டங்களை நேரில் பார்த்து, ஸ்டாலின் பேச வேண்டும்.

கரோனா தொற்று காலகட்டத்தில் பா.ஜ.க நடத்தும் வேல் யாத்திரையைத் தவிர்த்து இருக்கலாம். அரசியல் காரணம் மற்றும் தேர்தல் நெருங்குவதால் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரை நடத்துகிறார்.
பிரேமலதா விஜயகாந்த் எங்கள் ஊர் மருமகள். அவரிடம் தவறான செய்தியைக் கூறியதால், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டு சாலைகள் சரியில்லை என்று புகார் கூறியுள்ளார். விஜயகாந்த் ஓடியாடி விளையாடிய இடங்கள் அனைத்தும் தற்போது, 'ஸ்மார்ட் சிட்டி' மூலம் வளமாக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.