Skip to main content

"இதனை நான் சும்மா விட போவதில்லை"- ஹெச்.ராஜா ஆவேச பேட்டி!!

Published on 18/05/2022 | Edited on 18/05/2022


 

BJP LEADER HRAJA PRESSMEET AT DINDIGUL

 

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் பழனி இடும்பன் கோயில் குளக்கரையில் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா மற்றும் மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்தனர்.

 

இந்த நிலையில், காவல்துறை மதியம் 03.00 மணிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து நிகழ்ச்சி  நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறவில்லை. நிகழ்ச்சி இரவு நேரம் நடைபெறுவதால் மின்சார ஏற்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை, நிகழ்ச்சிக்கு பெண்கள் உட்பட 300- க்கும் மேற்பட்டவர்கள் வர இருப்பதால் போதிய இடவசதி இல்லை, பக்தர்கள் எத்தனை வாகனங்களில் வருகை தருவார்கள் என்ற விபரம் அளிக்கவில்லை எனக் காரணம் கூறி அனுமதி மறுத்தது.

 

மேலும் பழனி காவல் உட்கோட்டம் முழுவதும் காவல் சட்டப்பிரிவு(30) 2 அமலில் இருப்பதாகக் கூறி சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாகக் கூறிய காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்த வந்துக் கொண்டிருந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜாவை, பழனி உட்கோட்ட காவல் பிரிவு எல்லை சத்திரப்பட்டியில் வைத்து திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமார்  மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான 100- க்கும் மேற்பட்ட போலீசார் கைது செய்தனர்.

BJP LEADER HRAJA PRESSMEET AT DINDIGUL

அதனால் போலீசாருடன் ஹெச்.ராஜா வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனை மரியாதைக் குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

 

இதுகுறித்து  பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவிடம் தொலைபேசி வாயிலாக கேட்கப்பட்டது, "இந்து மதத்தில் தான் பிறந்தது தவறா? இந்து மதத்தில் மலைகளையும், ஆறுகளையும், குளங்களையும் வழிபட சொல்லி கூறப்பட்டு இருக்கிறது. அதற்காக பழனி வந்த தன்னை திண்டுக்கல் மாவட்ட போலீசார் எவ்வித காரணமும் சொல்லாமல் கைது செய்திருக்கின்றனர். 

 

பழனிக்கு நெய்க்காரப்பட்டியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை கேட்டு விடக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு போலீசார் என்னை கைது செய்துள்ளனர். ஆனால் இதனை நான் சும்மா விட போவதில்லை. இந்துக்களுக்கான நீதியைக் கண்டிப்பாக நான் பெற்றுத் தருவேன். மேலும் எவ்வித காரணமும் கூறாமல், என்னை கைது செய்த திண்டுக்கல் போலீசாருக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவேன்" எனக் கூறினார். இதனால் பழனி பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவும் சூழலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.