Skip to main content

அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய பாஜக பிரமுகர் கைது

Published on 22/05/2022 | Edited on 22/05/2022

 

hjk

 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 13 ந் தேதி ஒரு உணவு விடுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா சென்ற கும்பல் உணவு சாப்பிட்ட போது பில் கூடுதலாக போட்டதாக ஏற்பட்ட தகராறில் உணவு விடுதி தரப்பிற்கும் கேரளா சுற்றுலா தரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கேரளா சுற்றுலா பயணிகள் வந்த வாகனம் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இரு தரப்பும் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர் முத்துப்பேட்டை போலிசார்.

 

இந்த சம்பவம் நடந்து முடிந்த நிலையில் அதிகாலையில் பாஜக பிரமுகர் ராமுவின் சித்தப்பாவான அதிமுக நகர இளைஞரணி துணைச் செயலாளர் சந்திரபோஸ் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். சத்தம் கேட்டு உடனே தீயை அணைத்ததால் பெரிய சேதங்கள் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் மேலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தைப் பார்த்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசும் போது... " பாஜக பிரமுகர் ராமுவின் சித்தப்பா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை உடனே கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம்"  என்று கூறினார். 

 

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ நாளில் அந்தப் பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்த குமரைய்யா மகன் பாஜக பிரமுகர் வசந்த் (எ) வசந்த குமார் உள்பட 7 பேர் சேர்ந்த கும்பல் தான் அதிமுக பிரமுகர் சந்திரபோஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது கண்டறியப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசும் முன்பு சித்தமல்லியில் மதுவிருந்து நடந்திருப்பதும் அதில் உணவு விடுதி உரிமையாளர் சகோதரர் மற்றும் பெட்ரோல் குண்டால் பாதிக்கப்பட்ட அதிமுக பிரமுகர் சந்திரபோஸ் உடன் ஏற்கனவே பிரச்சனையில் ஈடுபட்டிருந்த நபர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

 

சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு பாஜக பிரமுகர் வசந்த (எ) வசந்த குமார் கைது செய்யப்பட்டார். மற்ற 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வசந்த் ஏற்கனவே திமுக பிரமுகர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரித்த வழக்கிலும் சம்மந்தப்பட்டவர் என்றும் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்தின் தீவிர ஆதரவாளர் என்பதும் தெரிய வந்துள்ளது. கேரளாவில் இருந்து சுற்றுலா வந்தவர்களுக்கு ஆதரவாக பெட்ரோல் குண்டு வீசி இருப்பார்கள் என்று திசை திருப்ப முயன்று கடைசியில் பாஜக பிரமுகர் வசந்த் சிக்கிக் கொண்டதால் பாஜக விலேயே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது போல தொடர் சம்பவத்தில் ஈடுபடும் வசந்த் மீது குண்டர் தடுப்பு காவல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் புகார் கொடுத்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.