பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி திருச்சி கருமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்களை கிழித்தவர்கள் மீதும், பாஜக மண்டல தலைவரை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராகிம் மற்றும் மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் இன்று மீண்டும் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து கேட்டறிந்தனர்.
பின்னர் சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “திருச்சி கருமண்டபத்தில் பிரதமர் மோடி பிறந்தநாள் பேனர்களை கிழித்தவர்கள் மீதும், பாஜக மண்டல தலைவரை தாக்கியவர்கள் மீதும் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருகிற சனிக்கிழமை அன்று பாஜக சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
மீண்டும் நடவடிக்கை எடுக்க மறுத்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம். தமிழகத்தில் திமுக ஆட்சியில் ரவுடிசம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த செயலுக்கு தமிழக மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். வருகின்ற 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த பாராளுமன்ற தேர்தலுடன் நிச்சயம் சட்டமன்றத் தேர்தலும் நடக்கும். தேர்தலில் நிச்சயம் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்” என்று அவர் கூறினார்.