Skip to main content

’’எஸ்.வி.சேகரை தப்பவைக்கும் நோக்கத்துடன் பாஜகவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்’’-கே.பாலகிருஷ்ணன்

Published on 23/04/2018 | Edited on 23/04/2018
kb

 

ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கும் பாஜகவினரின் நெருக்கடியை புறந்தள்ளி, ஊழியர்களை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஊடகத்துறை ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

 

அக்கடிதம் :  ’’ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக ஊடகங்கள் உள்ளன. பல கடினமான சூழ்நிலைகளைக் கடந்துதான் பலரும் இந்த துறையில் பணியாற்றிவருகின்றனர்.

 

இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், ஊடகவியலாளர்களைக் குறித்து செய்திருந்த பதிவும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும் மிகவும் வருத்தமளிக்கின்றன.

 

எஸ்.வி.சேகர் செய்திருந்த பதிவு, பெண் ஊடகவியலாளர்கள் பணிக்காகவும், சம்பளத்திற்காகவும், பணி உயர்வுக்காகவும் தங்கள் சுயமரியாதையையும், கௌரவத்தையும் இழப்பவர்கள் என்றும், ஊடக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளை பெண் பித்தர்கள் என்றும் ஒட்டுமொத்தமாக சித்தரிக்கிறது. இது ஊடகப் பணியாளர்கள் மட்டுமின்றி அனைவரையும் கோபம் கொள்ளச் செய்திருக்கிறது. 

ஒரு புதிய வாய்ப்பு திறக்கப்பட்டிருப்பதன் காரணமாக எராளமான புதிய இளைஞர்கள், பெண் பணியாளர்கள் அதிலும் முதல் தலைமுறையைச் சேர்ந்த பலர் இந்தப் பணிக்கு வந்திருக்கின்றனர். இரவு-பகல் பாராமல் கடினமான பணியைச் செய்துகொண்டுள்ளனர். அவர்களைக் குறித்து இத்தகைய அவதூறுக் கருத்தைப் பரப்புவது, குடும்ப வாழ்க்கையிலும், சமூகத்தின் முன்னிலையிலும் கூனிக் குறுகச் செய்திடும் உள்நோக்கம் கொண்டது. இதன் மூலம் துணிச்சலான, தவறுகளைத் தட்டிக் கேட்கும், ஊடகப் பணியாளர்களை அச்சுறுத்த விரும்புகின்றனர்.

 

ஊடகத்துறையினரை இழிவுப்படுத்தி, மிரட்டி பணியவைக்கச் செய்யும் இந்த அறுவெறுப்பான பதிவுக்கு எதிராக ஊடக நிறுவனங்களே புகாரளித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்க வேண்டும். இப்போதும் கூட பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழ்நாடு மகளிர் ஆணையம் ஆகியோரிடம் ஊடக நிறுவனங்களே புகார் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். 

 

காவல்துறையும் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவதுடன், கைதும் செய்திருக்க வேண்டும். இவையெல்லாம் நடக்காத நிலையிலேயே ஊடகத்தில் பணியாற்றுவோர் போராட்டத்திற்கு தள்ளப்பட்டனர்.


தற்போது, போராட்டத்தைக் காரணம் காட்டி, எஸ்.வி.சேகரை தப்பவைக்கும் நோக்கத்துடன் பாஜகவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஊடக நிறுவனங்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடுமையான நெருக்கடியைக் கொடுத்துவருவதாக அறிகிறோம். ஆளுங்கட்சி தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தியும், விளம்பர வருவாய் என்கிற ஆசை காட்டியும், ஊடகப் பணியாளர்களை பழிவாங்குவதற்கு நிர்ப்பந்திப்பதையும், அதற்கு நிறுவனங்கள் பணிய வற்புறுத்தப்படுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மோசமான பிரச்சனையாகப் பார்க்கிறது. 

 

ஏற்கனவே கடந்த காலங்களில் பாஜகவை எதிர்த்து கருத்து தெரிவித்ததற்காக சில ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்பட்டது, சில ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியதும் அனைவரும் அறிந்ததே. எத்தகைய தவறு செய்தாலும் தாங்கள் ஆளுங்கட்சி என்பதால் - எந்த நியாயமான விமர்சனமும் ஊடகங்களில் வந்துவிடக் கூடாது என்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது. 

 

அவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பத்திரிக்கை நிர்வாகங்கள் நடந்துகொண்டால் அது ஊடக சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விடப்பட்ட அச்சுறுத்தலாகவே அமையும். 


எஸ்.வி.சேகர் எழுதியதைப் போன்ற  கீழ்த்தரமான பேச்சுக்களை தினமும் அள்ளி வீசுவோரைத் தப்புவிக்கவும், யாரும் எதிர்க்குரல் எழுப்பக் கூடாது என்பதற்குமாகவே இத்தகைய நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்படுவதாக நாங்கள் கருதுகிறோம். பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கள் பணி காரணமாக அச்சுறுத்தலை எதிர்கொள்கிறபோது,  நிறுவனங்கள் உடன்நின்று பாதுகாக்க வேண்டுமென அன்புடன் வலியுறுத்துகிறோம்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.