
மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையை விவரிக்கும் வகையில், மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் சென்னை எழும்பூர் ஆதித்தனார் சிலை அருகில் தொடங்கி, புதுபேட்டை மார்க்கெட்வரை நடைபெற்றது. மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் நடைபெற்ற மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, கீழனூர் ராஜேந்திரன், மத்திய சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் விக்டரி மோகன், சர்க்கிள் தலைவர்கள் சிவாலயா ஜாபர், ரியாஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பாஜக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி நடைபயனமாக வந்தனர். பிரச்சாரப் பயணத்தின்போது, சாலை ஓரமாக அமைந்துள்ள கடைகள், சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு, பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளான, சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களைக் காங்கிரஸ் தொண்டர்கள் வழங்கினார்கள்.

காங்கிரஸ் கட்சியினர் கையில் மூவர்ணக் கொடி, கண்டனப் பதாகைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், “மத்திய பாஜக அரசின் தவறான கொள்கையால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பாஜக அரசு பதவியேற்றபோது இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் இன்றைக்கு நாட்டில் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், உழைப்பாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எதிரான அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடிய அரசாக மத்திய பாஜக அரசு செயல்பட்டுவருகிறது.
அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசாக பாஜக அரசு இருக்கிறது. பாஜக அரசு, இதுவரை அவர்கள் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கக் கூடிய செயல்களிலேயே ஈடுபட்டுவருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மத்திய பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராடுவோம். பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவை மதமாற்றம் என்பது இந்திய ஜனநாயகத்தில் கிடையாது.

கிறிஸ்தவ மக்கள் வேற்று மதத்தினரை தங்கள் மதத்தில் மதமாற்றம் செய்து வருகின்றனர் என ஆர்எஸ்எஸ் பாஜக சொல்வது கிறிஸ்தவர்கள் மீது தவறான கருத்துகளைப் பரப்பும் செயலாகும். கிறிஸ்தவர்கள் இன்றுவரை சிறுபான்மையினராகவே இருந்துவருகின்றனர். அவர்கள் மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும். சிறுபான்மை மக்கள் மீது தவறான கருத்துகளைப் பரப்புவதற்காகவே பாஜக ஆர்எஸ்எஸ் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்” எனவும் தெரிவித்தார்.